Three arrested for threatening transgenders with dummy gun

Advertisment

கோவையில் டம்மி துப்பாக்கியை காட்டி திருநங்கைகளை மிரட்டிய கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதிக்கு வந்திருந்த மூன்று இளைஞர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்த திருநங்கைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது திருநங்கைகள் கூட்டத்திற்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது திலீப் என்ற இளைஞர் சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் ஏர்கன் பிஸ்டல் துப்பாக்கியைஎடுத்து அங்கிருந்த திருநங்கைகளை மிரட்டியுள்ளார்.

இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் பயந்துபோய் துடியலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக உதவி ஆய்வாளர்கள் துரைராஜ், ஐயாசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். துப்பாக்கியில் சுடப் போவதாக மிரட்டிய அந்த மூன்று இளைஞர்களையும் பிடித்ததோடு அவர்கள் வைத்திருந்த போலித்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த திலீப், பாலக்காடு புதூர் டெம்பிள் வீதியைச் சேர்ந்த கிஷோர் மற்றும் கோவை மாங்கரையைச் சேர்ந்த சமீர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் யூடியூப் பிரபலங்கள் என்பதும் கேரளாவிலிருந்து ஊட்டி செல்லும் போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.