Skip to main content

ஆடு திருடியதாக பள்ளி மாணவன் உட்பட மூவர் கைது!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

Three arrested for stealing goats

 

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடிச் சென்ற 10ம் வகுப்பு மாணவன் உள்ளிட்ட மூவரை  சிசிடிவி கேமரா உதவியோடு சமயபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும் திருடிய ஆடுகளையும், ஆடு திருட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

சமயபுரம் அருகே பள்ளிவிடை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பாபிள்ளை மகன் பரமசிவம் (57). இவர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். மதியம் 3 மணிக்கு ஆடுகளை அங்கேயே மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டிற்கு சென்று மதிய உணவு உண்டு விட்டு ஆடுகள் மேயும் இடத்திற்கு வந்துள்ளார் பரமசிவம்.  அங்கு வந்து பார்த்த போது தனது ஆடுகளில் இரண்டு ஆடுகளை காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.  இது குறித்து  பரமசிவம் சமயபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

 

புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது சிசிடிவி கேமராவில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் ஆடுகளை திருடி இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்வது தெரிய வந்தது.

 

இதனை வைத்து சமயபுரம் நால்ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, திருட்டில் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் இவர்கள் மூவரும் வந்துள்ளனர். போலிசார் அவர்களிடம் விசாரித்த போது, ஆடு திருடியதை ஒப்புக் கொண்டனர். ஆடு திருடிய சமயபுரம் டோல்கேட் பூக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்த செபஸ்டீன்ராஜ் மகன் ஹரிஹரன் (21). கூத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மதிக்கதக்க ஒருவரும், திருவள்ளுவர் அவின்யு பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கதக்க ஒருவரும் என மூவரையும் கைது செய்தனர்.

 

மூவர் மீதும் திருட்டு வழக்கு பதிந்து கைது செய்த போலீசார் அவர்கள் திருடிச் சென்ற இரண்டு ஆடுகளையும், திருட்டிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தினையும் சமயபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்த ஆடுகளை உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.