
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மர்ம நபர் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்பாகவே சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது. தொடர்ந்து மிக அண்மையில் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதுவும் புரளி என தெரியவந்தது. இந்நிலையில் இன்று (10/06/2025) சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மீண்டும் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அவரது இல்லத்தில் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையாகவே புதுவையிலும் இதேபோல் ஆளுநர் மாளிகை, முதல்வர் அலுவலகம், ஜிம்பர் மருத்துவமனை என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடும் மர்ம நபரை பிடிக்க முடியாமல் புதுச்சேரி போலீசார் மற்றும் மத்திய சைபர் கிரைம் போலீசார் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.