Threatening to publish intimate photos; Girl's father arrested

காதலித்த பெண் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டிய இளைஞரை பெண்ணின் தந்தை கொலை செய்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரம் பகுதியைச்சேர்ந்தவர் சக்திவேல்(23). மினி வேன் ஒன்றை சொந்தமாக வாங்கி அதனை வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி பைக்கில் வெளியே சென்ற சக்திவேல் மீண்டும் வீடு திரும்பவில்லை. சக்திவேலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி அம்மாபேட்டை அருகே ஒரு வாய்க்காலில் இளைஞரின் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் இளைஞர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டது சக்திவேல் என்பது தெரியவந்தது.

சக்திவேலின் செல்போன் நம்பரில் கடைசியாக அவர் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கடைசியாக அய்யாசாமிபட்டி எனும் பகுதியைச் சேர்ந்த பாலகுரு என்பவரிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது. உடனடியாக பாலகுருவை போலீசார் விசாரணை செய்ததில் பாலகுரு மற்றும் அவரின் மகன் துரைமுருகன், மகள் தேவிகா உள்ளிட்ட எட்டு பேர் சக்திவேலைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில், பாலகுருவின் மகள் தேவிகாவுடன் சக்திவேலுக்கு காதல் இருந்தது.

Advertisment

 Threatening to publish intimate photos; Girl's father arrested

தேவிகாவும் சக்திவேலும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், தேவிகாவின் தந்தை பாலகுரு, சக்திவேல் குறித்து அவ்வூரில்விசாரித்த போது யாருமே நல்ல விதமாக சொல்லாததால், அதிருப்தியில் இருந்தார். தனது மகளை சக்திவேலுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பவில்லை. மேலும், சக்திவேலுக்கு மதுப்பழக்கம், சிகரெட் பழக்கம், பெண்கள் பழக்கம் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவித்தனர். இதனால் தேவிகாவும் சக்திவேலின் காதலைக் கைவிட்டுள்ளார். ஆனால் தேவிகாவை தொடர்பு கொண்ட சக்திவேல் நாம் இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு விடுவேன் என தேவிகாவை மிரட்டி உள்ளார். இதனை தேவிகா தந்தை பாலகுருவிடம் தெரிவித்த நிலையில் ஆத்திரத்தில் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.