
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் ஒரு சிறுமி டீ வாங்குவதற்காக டீக்கடைக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த இருவர் அச்சிறுமி, அவர்கள் வீட்டில் செல்போன் திருடியதாகக் கூறி டீக்கடை அருகே இருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். இந்தக் கொடூர சம்பவம் பற்றி தகவல் அறிந்து சென்ற கீரமங்கலம் போலீசார் சிறுமியின் கட்டை அவிழ்த்து மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று இது சம்மந்தமாக நக்கீரன் இணையத்தில், ‘சிறுமியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்... பசிக் கொடுமையால் நேர்ந்த துயரம்’ எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
நக்கீரன் இணைய செய்தியையடுத்து திருச்சி மண்டல ஐ.ஜி அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி அலுவலகம் நடவடிக்கையை துறிதப்படுத்திய நிலையில் குளமங்கலம் வடக்கு வட்ட கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி சம்பவம் நடந்த இடத்திலும் பாதிக்கப்பட்டவர்களிடமும் விசாரனை செய்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக ஞானமணி, அவரது மனைவி மலர் மற்றும் பால்ராஜ், சுப்பிரமணியன் ஆகிய 4 பேர் மீது புகார் கொடுத்தார். இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்து கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் ஞானமணி மற்றும் அவரது மனைவி மலர் ஆகியோரை கைது செய்தனர்.
தவறு செய்த குழந்தைக்கு அதன் தவறை திருத்தி, அறிவுரை கூறி நல்வழிப்படுத்த வேண்டியவர்கள் அந்தச் சிறுமியை பொது இடத்தில் பலர் முன்னிலையில் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. இது போன்ற எந்த சம்பவம் இனியும், வேறு எங்கும் நடக்க கூடாது. மேலும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு உடனடியாக உளவியல் ஆலோசனையும் சிகிச்சையும் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.