உலகத்துக்கு ஏதாவது கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்ற துடிப்போடு பேசி, அதனை வீடியோ பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர்கள், அனேகம் பேர். நாகராஜும், மாலையனும் அந்த ரகம்தான்.
விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையடிவாரத்தில் இயங்கும் அம்மையப்பர் சமூக அறக்கட்டளையின் சார்பில் பேசுகிறோம் என அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், சதுரகிரி மலைக் காப்புக்காட்டில் மாலையன் நீர்க்கொடிகளை வெட்டுவதும், கொடியிலுள்ள நீரை நாகராஜ் அருந்துவதும் பதிவாகியுள்ளது. மேலும், “இறைவன் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான்..” என்று சிலாகித்துப் பேசி, “வனங்களைப் பாதுகாப்போம்..” என்று மக்களுக்கு அறிவுரையும் வழங்கியிருக்கின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவ, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா, தைலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜுவையும், மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, டி.கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாலையனையும், வனத்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்தனர். இருவருக்கும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியதோடு, “அத்துமீறி காட்டிற்குள் நுழைய மாட்டோம். மூலிகைகளை வெட்ட மாட்டோம். வீடியோ எடுத்து வெளியிட மாட்டோம்.” என்று தோப்புக்கரணம் போட்டவாறே ஒப்பிக்கச் சொல்லி, அதனை வீடியோ பதிவாக்கியுள்ளது, வனத்துறை.
விடுவித்தபோது, ‘நல்லதுக்கு காலமில்லை..’ என்று நாகராஜ் முனகியது, நல்லவேளை.. வனத்துறையினருக்குக் கேட்கவில்லை.