‘தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது’ - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

‘Those who insulted Tamils ​​should not be forgiven’ -  Ramadoss

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி நேற்று வங்கியின் மண்டல இயக்குநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. குடியரசு தின விழா முடிந்த பிறகு ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 'தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை' என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வாதிட்டனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனத்தைதக்தெரிவித்து வருகிறார்கள். திமுகவைச் சேர்ந்த கனிமொழி, நடிகர் கமல், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்நிலையில், வங்கி ஊழியர்கள் மீது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் இந்திய ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தவறியுள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டே இதைச் செய்ய மறுத்திருப்பது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல்.

மத்திய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தமிழகத்தில் தமிழ்நாட்டின் விதிகளை மதிக்க வேண்டும். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது. இதுகுறித்து புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என அரசும், காவல்துறையும் காத்திருக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Ramadoss
இதையும் படியுங்கள்
Subscribe