Skip to main content

சிதம்பரம்: தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

Published on 25/12/2020 | Edited on 25/12/2020

 

Those involved in serial vehicle theft arrested in Annamalai Nagar

 

சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுற்றுவட்டாரப் பகுதிகளில், அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. இதில், வல்லம்படுகை சரவணன் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த அவரது இரு சக்கர வாகனம் திருடுபோனது. அதேபோல், சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், அண்ணாமலை நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அருகில் நிறுத்தி வைத்திருந்த அவரது இருசக்கர வாகனமும் திருடுபோனது.

 

இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் கணபதி, லட்சுமிராமன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் துரை, ரவி மற்றும் காவலர்கள் தனித்தனியாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வல்லம்படுகை சோதனைச்சாவடி அருகே சீர்காழியைச் சேர்ந்த இலக்கியன்(24) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்குபின் முரணாகக் கூறினார். துருவித் துருவி விசாரணை செய்ததில் வாகனத்தை வல்லம்படுகை சரவணன் வீட்டு முன்பாகத் திருடி வந்ததை ஒப்புக்கொண்டார்.

 

அதேபோன்று அம்மாபேட்டை அருகில் வாகனச் சோதனை செய்தபோது, அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி தணிக்கை செய்தபோது, அதில் வந்த இரண்டு நபர்கள் ஆவணங்களைக் காட்டாமல் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளனர். பின்னர் வாகனத்தை ஓட்டியவர் பூம்புகாரைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 25) மற்றும் பின்னால் அமர்ந்து வந்த மயிலாடுதுறை திருவெண்காடு பிரபு (வயது 28) ஆகிய இருவரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தை திருடிவந்தது ஒப்புக்கொண்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டு சிதம்பரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவின் பேரில், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.