Skip to main content

தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

Those involved serial robbery arrested

 

விழுப்புரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாசர், இவரின் மனைவி ப்ளோரி. இவர்கள் இருவரும் கடந்த 28-ம் தேதி இரவு விழுப்புரம் பஸ் நிலையத்திலிருந்து தங்கள் குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தங்களுக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தில் காணை என்ற கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சோழகங்கம் என்ற பகுதியில் அவர்கள் வாகனத்தில் செல்லும்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வழிமறித்து லாசர் தம்பதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து இரண்டரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். 

 

இது குறித்து அந்தத் தம்பதிகள் காணை போலீசாரிடம் புகார் அளிக்க, அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே ஒரு வழிப்பறியில் திருடுபோன மொபைல் போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தனர். அதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு கும்பல் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலை சோமாசிபாடி பகுதியில் தங்கியிருந்த போரூர் ராக்கி, சிவசக்தி நகர் அருணாச்சலம், ஊத்துக்கோட்டை கலையரசன், பாய்ச்சல் பகுதியைச் சேர்ந்த வீரமணி ஆகிய நால்வரையும் கைது செய்தனர்.

 

அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து இரண்டு கத்தி ஒரு இருசக்கர வாகனம், ஏழு செல்போன்கள், இரண்டரை சவரன் நகை ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஒரே நாளில் விழுப்புரம் காணை, திருவண்ணாமலை, செஞ்சி , உட்பட 11 இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

 

மேலும் இவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொலை வழக்கில் சிறைக்குச் சென்று வெளியே வந்த சிவா என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தொடர் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.