Skip to main content

பரவும் தொற்று... தூத்துக்குடியின் புதிய காய்கறி சந்தையும் மூடல்!

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
 Thoothukudi's new vegetable market closes

 

தூத்துக்குடி நகரம் உள்பட மாவட்டம் முழுமையிலும், கரோனா தொற்று பரவல் வேகமெடுக்கிறது. அன்றாடம் 200, 180, 150, என்ற அளவிலேயே தொற்றின் அளவுகோல் போய்க் கொண்டிருக்கிறது. அது மாவட்டத்தில் சமூக தொற்றாகி இன்றைய அளவில் பாதிப்பின் அளவு 3,914க்கு சென்றும் பாதிப்பு மேற்குறிப்பிட்ட அளவுகளுக்கு குறைந்தபாடில்லை.

 

எனவே இதனைக் கருத்தில் கொண்டுதான் கடந்த மாதமே தூத்துக்குடியின் பெரிய காய்கறி கடைகளில் கூட்டம் கூடுவதால், தொற்று பரவலாகிவிடும். அதனைத் தடுக்கும் வகையில் அந்த பிரதானக் காய்கறி கடைகளை மூடிவிட்டு, நகரின் வெளிப்புறமுள்ள புதிய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் கூடிய 50க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளை மாவட்ட கலெக்டரான சந்தீப் நந்தூரியும், மாநகராட்சி கமிசனரான ஜெயசீலனும் இணைந்து அமைத்தனர்.

 

தற்போது இந்த தற்காலிக காய்கறி சந்தையில் நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில், 27 வியாபாரிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இயைடுத்து மீதமுள்ள வியாபாரிகளுக்கும் கரோனா சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் புதிய பேருந்து நிலைய காய்கறி சந்தை மூடப்பட்டு, கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Next Story

இரவில் சீறிப்பாய்ந்த சொகுசு கார்; போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
police confiscated liquor  who were smuggled in luxury car in Thoothukudi

இந்தியாவில் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே ஒரு வழியாக அதனதன் கூட்டணிகளை உறுதி செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

இது ஒரு புறமிருக்க, தேர்தல் தொடங்கிய காரணத்தால், தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும். முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதற்காகவே இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு விலக்கு பகுதியில் வாகன சோதனை நடைபெற்றுள்ளது. சாத்தான்குளம் உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரவு சுமார் 8.30 மணியளவில் வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்தக் காரை கவனித்த போலீசார், உடனே காரை நிறுத்தும்படி சைகை காண்பித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து அந்தக் கார் வேகமாக வந்துள்ளது. இதனால் கடுப்பான போலீசார், உடனே அந்தக் காரை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது, அந்தக் காரில் தேர்தல் செலவிற்காக பணம் எடுத்துச் செல்லப்படுகிறதா?... என்ற கோணத்தில் காரை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த சொகுசு காருக்குள் விலை உயர்ந்த 12 பீர் பாட்டில்கள் இருந்துள்ளது. ஆனால், அந்த வகை மதுபாட்டில் அரசு மதுபான கடைகளில் கிடைக்காது என சொல்லப்படுகிறது. இதனால், இது குறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை செய்துள்ளனர். ஆனால், ஓட்டுநர் எந்த பதிலும் கூறவில்லை என சொல்லப்படுகிறது. அதன் பின்னர், அதே காருக்குள் பெரிய பை ஒன்று இருந்துள்ளது. அந்தப் பையில் என்ன இருக்கிறது என சோதனையிட்ட போலீசாருக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாகியுள்ளது.

காரணம் அந்தப் பையில் மேலும் சில மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக விலைக்கு விற்கப்படும் மதுபான பாட்டில்களை வைத்திருந்தது குறித்து ஓட்டுநரிடம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் கார் ஓட்டுனர், நாகர்கோவிலைச் சேர்ந்த வினோத்குமாரின் மகன் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த விலை உயர்வான மதுபாட்டில்கள் எந்த இடத்தில் வாங்கப்பட்டது என வாய்த்திறக்கவில்லை.

அதே சமயத்தில் இந்த மது பாட்டில்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும், அரசியல் கட்சி நிர்வாகிகளுக்காக வாங்கி வரப்பட்டதா?... என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அந்த ஓட்டுநரை உடனடியாக போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில், மது பாட்டிலோடு வந்த சொகுசு கார் ஒன்று, போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.