Skip to main content

நள்ளிரவில்… துடிக்க துடிக்க… சாதி ஆணவத்தின் கோரத் தாண்டவம்! 

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

ஜூலை 4-ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் நடந்து முடிந்திருந்தது அந்த இரட்டைப் படுகொலை. பல கனவுகளுடன் திருமணம் செய்துகொண்ட இரண்டே மாதத்தில் உயிரைப் பறிகொடுத்திருந்தது அந்தப் புதுமணத் தம்பதி. 
 

முகம், கழுத்து, முதுகு, தோள்பட்டை, மணிக்கட்டு என மிகக்கொடூரமாக வெட்டப்பட்டதில், படுத்த படுக்கையிலேயே ரத்தவெள்ளத்தில் பிணமாகி இருந்தனர் இருவரும். அதிகாலை உறக்கம் கழிந்து வந்து பார்த்த முத்துமாரிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மகனும், மருமகளும் சதைப் பிண்டமாகக் கிடப்பதைக் கண்டு ஓலமெடுத்து அவர் அலறியதில்தான், ஊர்முழுக்க இந்தக் கொடூரச் செய்தி பரவியது. 

 

jothi-solairaj


 

"உடலில் விழுந்த ஒவ்வொன்றும் மிக ஆழமான வெட்டுகள். கத்தாமல் இருப்பதற்காகவே கழுத்திலும், குரல்வளையிலும் குறிவைத்து வெட்டியதில், சத்தமில்லாமல் அடங்கி இருக்கிறது மூச்சு'’என்று சடலத்தைப் பார்வையிட்ட காவல்துறையினர் பேசிக் கொண்டார்கள். இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின்னாலும் சாதி, வர்க்க ஆணவமே கோரத்தாண்டவம் ஆடியிருப்பதாக நமக்குத் தகவல் கிடைக்க, அந்தப் பகுதியில் விசாரித்தோம். 
 

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியிலுள்ள பெரியார் நகர் காலனியில்தான் இந்த பயங்கரம் நடந்தேறியது. அங்கு வசிப்பவர் முத்துமாரி, கொல்லப்பட்ட சோலைராஜின் தாயார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த சோலைராஜ், குடும்பச்சூழலால் அருகிலுள்ள கல்லூரியிலிருக்கும் உப்பளத்தில் கூலி வேலைக்குப் போனார். அங்கு வேலைக்கு வந்த குளத்தூர் பக்கமுள்ள பல்லாகுளத்தைச் சேர்ந்த அழகரின் மகள் ஜோதியோடு, சோலைராஜுக்கு காதல் மலர்ந்தது. இவர்கள் இருவருமே தாழ்த்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், உட்பிரிவுகள் வெவ்வேறானவை. இருந்தும் நம்பிக்கையோடு காதலை வளர்த்தவர்களுக்கு திருமணம் செய்துகொண்டு குடும்பமாக வாழவேண்டுமென்பது கனவாக இருந்தது. 


 

 

சோலைராஜ் கூலித்தொழிலாளி. வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தவர் ஜோதி. அவரது தந்தை அழகருக்கு சுயமாக வாழ்கிற லெவலுக்கு விவசாய நிலமும், வெளிநாட்டு வேலையும் இருந்தது. மூன்று மகள்கள், ஒரு மகன். ஜோதிதான் மூத்த மகள். மூன்று மாதங்களுக்கு முன்புதான் சோலைராஜ் உடனான ஜோதியின் காதலை அறிந்து அதிர்ச்சியடைந்த அழகர், கடுமையாக எதிர்த்திருக்கிறார். இதில் அவரது உறவுகளும் ஒட்டிக்கொள்ள, எதிர்ப்புகளை மீறி மாலை மாற்றிக் கொண்டனர். 
 

இருவரும் சோலைராஜின் வீட்டிலேயே குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே தன் இரண்டு மகள்களின் சடங்கு நிகழ்ச்சிக்காக பத்திரிகை அடித்து ஊர்முழுக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார் அழகர். இந்நிலையில்தான், "சாதி மாறி அதுவும் கூலிக்காரனோடு ஓடிப்போனவளின் வீட்டில் யார் பெண் எடுப்பார்கள்' என்ற பேச்சு அழகரின் மனதைப் பிசைந்தது. இனி விழாவிற்கு வந்தாலும் சொந்த பந்தங்களின் வாயிலிருந்து இதே பேச்சு வருமே என்று எண்ணியவர், பத்திரிகை கொடுத்து முடித்த கையோடு, சடங்கு நிகழ்ச்சியை நிறுத்தினார். விடாமல் தூபம் போட்டார்கள் உற்றார் உறவினர். கூலிக்காரனோடு ஓடிப்போன ஓடுகாலியை விட்டுவைக்கணுமா? என்ற தொடர் கேள்விகள் அழகரின் மூளைக்குள் ஆணவ வெறியைத் தூண்டின. இந்தச் சூழலில்தான் காலனியில் இருக்கும் சோலைராஜையும், ஜோதியையும் வேவு பார்த்து, வெயிலின் தாக்கத்தால் வீட்டுவாசலில் உறங்குவதை அறிந்துகொண்டு இரவோடு இரவாக காரியத்தை முடித்திருக்கிறார்கள்.  
 

குற்றவாளிகளைக் கைதுசெய்யாத வரை உடல்களை வாங்கமாட்டோம் என்று போராட்டம் நடந்து கொண்டிருக்க, “""அந்தப் பொண்ணு வீட்ல எதிர்ப்பு. எது வேணாலும் நடக்கலாம்ன்னு சொல்லித்தான், உசுருக்குப் பாதுகாப்பு இல்லைன்னு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். அவுகளைக் கூப்பிட்டு, "ரெண்டுபேரும் மேஜர். மனசு ஒத்தவகளைத் தொந்தரவு பண்ணக்கூடாது'ன்னு எச்சரிச்சு அனுப்பினாங்க. இருந்தும் இப்புடி துடிதுடிக்க சீரழிச்சுட்டாவளே'' என்று துணையாக இருந்த மகனையும், மருமகளையும் பறிகொடுத்த முத்துமாரி கதறினார். 


 

 

விசாரணை அதிகாரிகளுடன் பேசியதில், “""வேறு சாதிக்காரரோடு மகள் போனதை, அவரது தந்தையால் ஜீரணிக்க முடியவில்லை. தவிர, இந்தப் படுகொலையில் இருவரின் உடல்களில் விழுந்த வெட்டுகளின் ஆழத்தைப் பார்க்கும்போது, புதிதாக கொலைசெய்ய அரிவாள் பிடித்தவர்களைப் போலத் தெரியவில்லை. முதலில் ஒரேநேரத்தில் இருவரின் குரல்வளையைக் குறிவைத்து ஆழமாக வெட்டிப் பிளந்து, அவர்களை ஓலமிட விடாமல் செய்துவிட்டு, பின் மணிக்கட்டுகளைத் துண்டாக்கி இருக்கிறார்கள். கூலிப்படையினர் மற்றும் தேர்ந்த குற்றவாளிகளின் ஸ்டைல் இது''’என்கிறார்கள். 
 

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் கூறியது, ""பெண்ணின் தந்தை அழகர் மற்றும் சிலரையும் பிடித்து விசாரித்து வருகிறோம். அழகர் தான்தான் கொலை செய்ததாகச் சொல்கிறார். மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது''’என்றவரிடம், "இதுபோன்ற வெட்டும் திறன் சாதாரணமானவர்களுக்கு சாத்தியமா?' என்று கேட்டபோது, “""அந்தக் கோணத்திலும் பார்க்கிறோம்''’என்றார். 
 

சாதிமறுப்புத் திருமணங்களை காலமே அங்கீகரித்து விட்டது. சாதி ஆணவ வெறியோ முறுக்கிக்கொண்டு அரிவாளை உயர்த்துகிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

“ஜனநாயகமா? சர்வாதிகாரமா?” - கனிமொழி ஆவேசம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, நேற்று (16/04/2024) ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, “அம்மையார் ஜெயலலிதா ஒருமுறை சொன்னது போல் பரம்பரை பகைக்கான தேர்தல் தான் இது. சமூக நீதிக்கும் சமூகத்தின் அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல். ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் மீது பா.ஜ.க.விற்கோ நரேந்திர மோடிக்கோ துளியும் நம்பிக்கை கிடையாது. 

பாராளுமன்றத்திற்கே வராத பிரதமர் என்ற பெருமை இருக்கிறது என்றால் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும். என்றாவது ஒருநாள் அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார் என்றால் அவரது சாதனைகளையும் எதிர்க்கட்சிகளின் குறைகளையோ பேசுவதில்லை. யார் என்ன கேள்வி கேட்டாலும், முதலில் பிரதமர் மோடி, ஜவஹர்லால் நேரு கிட்ட சண்டை போடுவார். பெட்ரோல் விலை ஏன் ஏறியது எனக் கேட்டாலும், என்ன கேள்வி கேட்டாலும் ஜவஹர்லால் நேருவிடமிருந்து ஆரம்பிப்பார். எதிர்க்கட்சியினர் அவரை எதிர்த்து கேள்வி கேட்டதால், அனைவரும் வெளியேற்றப்பட்டோம்.

Kanimozhi obsession on modi and she questioned Democracy? Dictatorship? for lok sabha election

எந்த விவாதத்திலும் அவருக்கு நம்பிக்கை கிடையாது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதில்லை. சமூக செயல்பாட்டாளர்கள் கேட்டால் அவர்கள் மீது வழக்கு. மலைவாழ் மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த 92 வயது முதியவரைத் தீவிரவாதி என வழக்குப் போட்டு சிறையில் அடைத்தனர். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பெயில் கிடையாது. பா.ஜ.க.வில் உள்ள வாஷிங்மெஷினில் அக்கட்சியில் சேருபவர்கள் சுத்தம் செய்யப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரை சிறையில் போடுவார்கள்.

விவசாயிகள் டெல்லிக்குள் வந்து விடக்கூடாது என்று ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக்குண்டு, ரோட்டில் ஆணியை பதித்துக் கொண்டு விவசாயிகளைத் தடுக்கும் ஆட்சிதான் நரேந்திர மோடி ஆட்சி. மதத்தை வைத்து, ஜாதியை வைத்து மக்களை பிரிக்கக் கூடிய ஆட்சி. ஜிஎஸ்டி போட்டு சின்ன சின்ன கடைகள், சின்ன சின்ன வியாபாரிகள், சிறு, குறு தொழில்கள் என எல்லாத்தையும் நாசமாக்கி பலரைக் கடையை மூட வைத்த ஆட்சி பா.ஜ.க ஆட்சி.

தமிழகத்தில் ஜிஎஸ்டி வரியை எல்லாம் கொண்டு போய் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. ஆனால், பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் முதல் 7 ரூபாய் என வழங்கப்படுகிறது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்து எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் வீடுகள் இடிந்த போது கவலைப்படவில்லை. ஆனால், கோவிலில் உண்டியலில் காசு போடாதீர்கள் தட்டில் போடுங்கள் என அறிவுரை வழங்குகிறார்.

தமிழகத்திற்கு வஞ்சனை செய்யக்கூடிய ஆட்சி பா.ஜ.க ஆட்சி. வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இங்கு வராத மோடி, தேர்தல் வந்ததும் தமிழகத்தை சுற்றிச் சுற்றி வருகிறார். பா.ஜ.கவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட்டுவிடக்கூடாது. பா.ஜ.க கொண்டு வந்த சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க.விற்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

பெண்களுக்கு எதிராக குற்றங்களைப் புரியும் 44 பேர் எம்.பி.யாக பா.ஜ.க.வில் உள்ளனர்.  பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் மீது வழக்குகள் போடப்பட்டது. தவறு புரிந்த அவர் மீது எந்த வழக்கும் போடவில்லை. ஹிந்தி படிக்க வேண்டும் என்று சொன்ன மோடி, தேர்தல் வந்ததும் தமிழ் படிக்க வேண்டும் என்கிறார்.  மக்களுக்கு எதிராக ஆட்சி செய்யக்கூடிய பாஜக புறக்கணிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நாட்டுக்கு அவர்கள் தேவையில்லை என்பதை மக்கள் புரிய வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.