Skip to main content

உனக்கென்ன மரியாதை..? எஸ்.ஐ.-யின் மூக்கை உடைத்த மின்வாரிய ஊழியர்!!

Published on 15/05/2020 | Edited on 15/05/2020


 

thoothukudi


தன்னிடம் மரியாதைக் குறைவாக பேசிய எஸ்.ஐயின் மூக்கை உடைத்துள்ளார் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் தமிழ்நாடு மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சிவசங்கர பாண்டியன். விளாத்திக்குளம் முதலியார் தெருவில் வசிக்கும் இவர் வியாழனன்று முகக்கவசம் அணியாமல் விளாத்திக்குளம் கடைத்தெருவில் இரு சக்கர வாகனத்தில் அலைந்து திரியவே இவரை நிறுத்தி, "ஏன்.? முகக்கவசம் அணியவில்லையென" காவல் பணியில் இருந்த போலீஸ் நணபர்கள் குழுவினை சேர்ந்த வேலுச்சாமி மற்றும் அருண்குமார் ஆகியோர் கண்டித்திருக்கின்றனர். 
 

இதனால் கோபமடைந்த மின்வாரிய ஊழியர் பதிலுக்குச் சண்டையிட, அங்கு ஏற்கனவே காவல் பணியிலிருந்த முன்னாள் ரானுவ வீரரும் முகக்கவசம் அணியாததற்குக் கண்டித்துள்ளார். அவருடனும் சண்டை பிடித்த மின்வாரிய ஊழியர் கோபமாகவும், மரியாதையில்லாமல் பேசி விட்டு அங்கிருந்து தனது இல்லத்திற்குப் புறப்பட்டுள்ளார். 


சம்பவத்தினால் வேதனையடைந்த முன்னாள் ரானுவவீரரும், போலீஸ் நண்பர்கள் குழுவும் விளாத்திக்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளையிடம் முறையிட்ட வேளையில், அவரும் நடந்த சம்பவத்தினை விசாரித்து வருமாறு எஸ்.ஐ.ராமச்சந்திரனை பணித்திருக்கின்றார், எஸ்.ஐயும் மின்வாரிய ஊழியரைத் தேடி முதலியார் தெருவிற்குச் சென்று, தன்னுடைய புல்லட்டில் அமர்ந்து கொண்டே அங்கு நின்று கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் சிவசங்கரபாண்டியனை அழைத்து மரியாதை குறைவாக விசாரித்ததாகத் தெரிகின்றது. 
 

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த மின்வாரிய ஊழியர் புல்லட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த எஸ்.ஐ.யின், மூக்கில் குத்தவே, மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. பதட்டமடைந்த எஸ்.ஐ.ராமச்சந்திரன் அங்கிருந்து வெளியேறி, விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வீடு திரும்பியுள்ளார். எஸ்.ஐ.யிடம் புகார் பெற்று துறை ரீதியான நடவடிக்கைக்குக் காத்திருக்கின்றனர் போலீசார். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.