சாலையில் நின்று அரசு வேலைக்கேட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பணி ஆணையை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 328.66 கோடி மதிப்புள்ள 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், ரூபாய் 22.37 கோடியில் நிறைவுற்ற 16 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் ரூபாய் 37.55 கோடிக்கு வீட்டு மனைப்பட்டா, இரு சக்கர வாகன மானியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிலையில், சாலையில் நின்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய முதல்வரிடம், அரசு வேலை கோரி கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர், கோரிக்கை மனுவை பரிசீலித்து அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து அரசு பணி ஆணையை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் முதல்வருடன் உடனிருந்தனர்.
கோரிக்கை மனு பெறப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள் அரசு பணிக்கான ஆணையை அந்த பெண்ணுக்கு முதல்வர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.