Skip to main content

வட்டிக்கடன் தொல்லை... 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து வியாபாரி தற்கொலை முயற்சி! 

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

மைக்ரோ வட்டிக்கடன் தொல்லையால் கடன் பாரம் தாங்காமல் தென்காசி மாவட்டம் கட்டளைக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த வாரம் ஆட்டோ டிரைவர் கந்தசாமி, தன் மனைவி இந்துமதி மகன் சின்னமுத்திரன் இவர்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டுத தானும் தற்கொலை செய்து கொண்டது மாநிலத்தையே பரபரப்பாக்கிய சூடு அடங்குவதற்குள்.
 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இரும்பு வியாபாரி ஒருவர் தன் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தற்போது மூன்று பேரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். சாத்தான்குளத்தின் பிரண்டர் குளத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (33 வயது) இவரது மனைவி சிவசக்தி இவர்களுக்குப் பிரியதர்ஷினி (4 வயது) லாவண்யா (3 வயது) சக்திவேல் (2 வயது) மூன்று குழந்தைகள் உள்ளனர்.

thoothukudi district saththanakulam steel businessman incident police investigation


சென்னையில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்த வெற்றிவேல் வியாபாரத்திற்காக ஆங்காங்கே அதிக வட்டியில் கடன் வாங்கியிருக்கிறாராம். குடும்பச் செலவு, மற்றும் வியாபார மந்தம் காரணமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட, கடன் கொடுத்தவர்கள் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். பாரம் தாங்காத வெற்றிவேல் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். தனது மனைவியிடம் அவளின் பெற்றோர் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே தகராறு மூண்டுள்ளதாம். கோபமான மனைவி தன் மகன் சக்திவேலை மட்டும் அழைத்துக் கொண்டு செம்மண்குடியிருப்பிலுள்ள தன் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
 

இதனால் மேலும் மனமுடைந்து மன அழுத்தம் அதிகமாகிப் போன வெற்றிவேல், நேற்று முன்தினம் (15.12.2019) மாலை தன் மகள்களான பிரியதர்ஷினி, லாவண்யா இருவருக்கும் விஷம் கலந்த உணவைக் கொடுத்து விட்டு தானும் சாப்பிட மூன்று பேர்களும் மயங்கியதுடன் உயிருக்குப் போராடியிருக்கிறார்கள். அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூவரையும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டவர்கள் ஐ.சி.யூ. எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மனைவி சிவசக்தியின் புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

வறுமை, கடன், தொல்லை மனபாரம் தாங்க மாட்டாத தற்கொலைச் சம்பவங்கள் முயற்சிகள், தீவிரமாகத் தடுக்கப்பட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.