Skip to main content

''எனக்கும் மா.செ. கொடுங்க... இல்லையெனில்...?'' - கலகக் குரல் எழுப்பிய தூத்துக்குடி அதிமுக..!

Published on 29/12/2020 | Edited on 30/12/2020

 

thoothukudi admk

 

சட்டமன்றத் தேர்தல் இன்னதேதி என்றுதான் அறிவிக்கவில்லை! அதற்குள் எனக்குத் தான் பதவி வேண்டும், வேட்பாளர் சீட் வேண்டுமென அனைத்துக் கட்சிகளிலும் கலகக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், தற்பொழுது தூத்துக்குடியில் எழுந்துள்ள கலகக் குரல் அதிமுக தலைமையை மிரட்டியுள்ளது என்றே கூறலாம்.

 

அதிமுகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத கோஷ்டி அரசியல் தூத்துக்குடி மாவட்டத்தில் உண்டு. ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்தில், 15-க்கும் அதிகமான தலைமைகள் உண்டு. இதில், ஓபிஎஸ் விசுவாசியான ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், ஆவின் சேர்மன் சின்னதுரை மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைமைகள் பிரசித்தம்.!

 

2019 மார்ச் மாதத்திற்குப் பிறகு, மா.செ-வாக இருந்த சி.த.செல்லப்பாண்டியனை கட்சியின் அமைப்புச் செயலாளராகப் பதவி உயர்த்தி (?!) ஓரங்கட்டி விட்டு, மாவட்டத்தை தெற்கு, வடக்கு என இரண்டாகப் பிரித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு (திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய) செயலாளராக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதனையும், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திக்குளம் உள்ளடக்கிய வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் நியமித்தது தலைமை. இங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது. சி.த.செல்லப்பாண்டியனை ஒதுக்கும் நோக்கில், கட்சியின் எவ்வித நிகழ்விற்கும் அழைக்கவில்லை இரண்டு மா.செ-க்களும்.

 

thoothukudi admk

 

இவ்வேளையில், கடந்த 20-12-2020 அன்று, தூத்துக்குடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில், தூத்துக்குடி தெற்கு மா.செ-வும், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ-வுமான சண்முகநாதன் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடாய், கழகச் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். இதில் கலந்துகொள்ள சி.த.செல்லப்பாண்டியன், ஆவின் சேர்மன் சின்னதுரை உள்ளிட்டோருக்கு வழக்கம்போல் அழைப்பிதழ் அனுப்பவில்லை.

 

இதனால், கடுங்கோபமடைந்த சி.த.செல்லப்பாண்டியன் டீம், பொறுத்தது போதும்.! 'பொங்கி எழு மனோகரா!!' என்பதுபோல் தன்னுடைய ஆதரவாளர்களாகவுள்ள, அதிமுக நிர்வாகிகளின், அவசர (முக்கிய) ஆலோசனைக் கூட்டம், ஜனவரி 2-ல் தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில், தன்னுடைய தலைமையில் நடைபெறுவதாக அறிவித்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தினை எப்படிச் சிறப்பாக நடத்துவது என செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை வேளையில், தன்னுடைய சிதம்பரநகர் 4வது தெருவிலுள்ள அமைப்பு கழகச் செயலாளர் அலுவலகத்தில், கூட்டம் நடைபெறும் என அறிவித்தார் சி.த.செல்லப்பாண்டியன்.

 

thoothukudi admk

 

எதிர்பார்த்தது போலவே தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டி கூட்டத்தினை துவக்கினார் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன். மாநகரப் பகுதி செயலாளர் முருகன் எடுத்த எடுப்பிலேயே, "வடக்கிலுள்ள ஒட்டப்பிடாரத்தையும், தெற்கிலுள்ள தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிகளையும் பிரித்து, இரண்டு தொகுதிகளையும் மத்திய மாவட்டமாக்கி, அதனுடைய மா.செ-வாக சி.த.செல்லப்பாண்டியனை நியமிக்க வேண்டும். இலையெனில்?" எனக் குரலெழுப்பி கூட்டத்திற்கான ரகசியத்தை அப்போதே உடைத்தார். கூட்டத்திலுள்ள அனைவரும் அதனை ரசித்தநிலையில் ஏனைய நிர்வாகிகளும் இதே கருத்தை வழிமொழிந்து வருகின்றனர்.

 

வெற்றி நடைபோடும் தமிழகத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதரவுள்ள நிலையில், தூத்துக்குடியில் தலைமைக்கு எதிராகக் கலகக் குரல் எழும்பியுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.