மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்! மக்களவையில் தொல் திருமாவளவன்!

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், 17.07.2019 அன்று மக்களவையில் “இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை” மீதான மான்ய கோரிக்கை விவாதத்தில் எழுத்துப்பூர்வமாக தனது உரையைச் சமர்ப்பித்தார்.

thol thirumavalavan parliament speech

அதில், இளைஞர் நலமே தேசத்தின் நலமாகும். இன்றைய இளைஞர்கள் நாளையத் தலைவர்கள். எனவே இளைஞர்களின் நலன்களில் மையஅரசு கூடுதல் அக்கறை செலுத்தவேண்டியது அவசியமாகும். இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மது மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள்களுக்குப் பழக்கமாகி அடிமைப்பட்டுள்ளார்கள் என்பது வேதனைக்குரியதாகும். அவர்களை அதிலிருந்து மீட்க அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மது உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு மையஅரசு தடைவிதிக்க வேண்டும். குறிப்பாக, தேசிய அளவில் ‘மதுவிலக்கைத் தேசியக்கொள்கையாக’ அறிவிக்க வேண்டும்.

அத்துடன், அனைத்துப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விளையாட்டுத்துறைக்கான ஆசிரியர்களைப் போதிய அளவில் நியமனம் செய்யவேண்டும். அனைத்துக்கல்வி நிறுவனங்களிலும் விளையாட்டு மைதானம் அமையும் வகையில் அரசு உறுதிசெய்ய வேண்டும். மேலும் விளையாட்டுத்துறையில் விளையாட்டுடன் தொடர்பு இல்லாதவர்கள் ஆதிக்கம் செய்கின்றனர் என்பதை மனிதவள மேம்பாட்டுத்துறையின் நிலைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் பல அறிவுரைகளையும் பரிந்துரைகளையும் அந்த நிலைக்குழு மையஅரசுக்கு வழங்கியுள்ளது. அவற்றை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்து, விளையாட்டுத்துறையில் அரசியல் தலையீடுகள் தடுக்கப்பட வேண்டும் என்பதுடன் அது வணிகமயாவதையும் தடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்பது தங்கப்பதக்கங்களைப் பெற்ற விளையாட்டு ஹாக்கி விளையாட்டாகும். ஆனால், அது தற்போது தேசியவிளையாட்டு என்கிற அங்கீகாரத்தை இழந்துள்ளது வேதனைக்குரியதாகும். 2012 ஆம் ஆண்டு அந்த அங்கீகாரத்தை அரசு இரத்து செய்துள்ளது. இந்நிலையில், மீண்டும் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தொல். திருமாவளவன் மக்களவையில் தனது உரையைச் சமர்ப்பித்துள்ளார்.

Parliament Speech thol thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe