Skip to main content

நக்கீரன் செய்தியாளர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தொல்.திருமாவளவன் எம்.பி

Published on 24/09/2022 | Edited on 24/09/2022

 

Thol. Thirumavalavan mp meet nakkheeran journalist Damodaran Prakash at hospital

 

நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்பட கலைஞர் அஜித்குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக தற்போது அங்குள்ள சூழல் குறித்து கடந்த செப்.19- ஆம் தேதி செய்தி சேகரிக்கச் சென்றனர். அவர்கள் இருவரும் செய்தி சேகரித்து விட்டு வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது அவர்களை பின்தொடா்ந்து 5 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்கள் வந்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தி வாகனத்தின் கண்ணாடியை உடைத்து செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் புகைப்பட கலைஞர் அஜித்குமார் இருவரையும் தாக்கினார்கள்.

 

இதில் காயமடைந்த இருவரும் ஆத்தூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர். 

 

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் புகைப்பட கலைஞர் அஜித்குமார் இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

 

இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கனியாமூர் பள்ளி மாணவி சிறீமதி தொடர்பான உண்மைகளைத் துணிவாக வெளிச்சப்படுத்தி வரும் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அவருடன் படம்பிடிக்கச் சென்ற அஜித் ஆகியோர் மீது பள்ளி நிர்வாகத்தைச் சார்ந்த வன்முறைக் கும்பல் அண்மையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. 

 

அதனால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பிரகாஷ் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தோம். அவர் விரைவில் வீடுதிரும்ப வேண்டுமென வாழ்த்துகிறேன்.

 

கனியாமூர் பள்ளியிலிருந்து 20 கி.மீ.க்கும் மேல் பின்னாலேயே விரட்டி வந்து தாக்கியுள்ளது அக்கும்பல். எவ்வளவு குரூரமான கொலைவெறித்தனம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.