Thiruvekadu Temple Issue; TN Fact check Committee Explained

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் அம்மன் நகையை அக்கோயிலின் தற்காலிக அர்ச்சகர் ஒருவர் திருடி அடகு வைத்துள்ளார். இவர் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பயிற்சிப் பட்டறையில் தேர்வானவர் என்று வதந்தி பரப்பப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் நகையைத் திருடிய தற்காலிக அர்ச்சகர் தமிழ்நாடு அரசின் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் என்பது முற்றிலும் பொய்யானதாகும். இக்கோயிலில் தினக்கூலி அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர், சண்முகம். தனது தந்தை சுப்பிரமணியன் ஐயரிடம் ஆகமப் பயிற்சி பெற்று அதன் அடிப்படையிலேயே பூஜை செய்யும் பணியினை மேற்கொண்டு வந்துள்ளார்.

சண்முகம் இக்கோயிலில் பணியாற்றிய போது அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 57 கிராம் தங்க செயினுடன் கூடிய திருமாங்கல்யத்தைத் திருடி அடகு வைத்துள்ளார். திருமாங்கல்யம் மீட்கப்பட்டு மீண்டும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி அர்ச்சகரான சண்முகம் மீது திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.