இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. நாளை தீவிரப் புயலாகவும் மாறி வடமேற்குத் திசையில் நகர்ந்து, தற்போதைய நிலவரப்படி, வரும் 25 ஆம் தேதி பிற்பகல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும். இதனால், தமிழகத்தில் 26 -ஆம் தேதி வரை, மழை நீடிக்கும். அதேபோல் புயல் கரையைக் கடக்கும் பொழுது 100-லிருந்து 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 25-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட 4,713 இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்குப் போதிய உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த மக்கள், முன்கூட்டியே உணவுப் பொருட்களை வாங்க ஏதுவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைகாலிலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 84 விசைப் படகுகளும் உடனே கரை திரும்புமாறு இந்திய கடலோர காவல்படை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூரில், 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 120 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு தயாராக உள்ளதாகவும், அதேபோல், 300 ஜே.சி.பிக்கள், ஜெனரேட்டர்கள் தயாராக உள்ளதாகவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி தெரிவித்துள்ளார்.