Skip to main content

திருவாரூர் இடைத்தேர்தல்:  இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில்  போட்டியிடும் 'தமிழ் முழக்கம்' சாகுல்

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
s

 

ஜனவரி 28, அன்று நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதில் அக்கட்சி்யின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது, நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2-01-2019 அன்று அறிவித்தார்.

 

இந்நிலையில் 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது பற்றிய சிறுகுறிப்பை வெளியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.


தமிழ் முழக்கம்' சாகுல்:  ‘’திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகக் களமிறக்கப்பட்டிருப்பவர் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது (வயது 59). இவரது பிறந்த ஊர், ஒருங்கிணைந்த  நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்த அந்தனப்பேட்டை எனும் சிற்றூராகும். 1974 – 82 காலக்கட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவர் என்பதால் இவருக்கு, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி நன்கு அறிமுகம். 

 

திராவிடம், கம்யூனிசம், இந்தியம் என்று பல்வேறு கொள்கை பரப்பும் ஆயிரக்கணக்கான நாளிதழ்களும், மாத இதழ்களும் வெளிவருகின்ற தமிழகத்தில் அன்றுதொட்டு இன்றுவரை தமிழினம் சார்ந்து வெளிவந்த மிகசொற்ப இதழ்களில் ஒன்றான  ‘தமிழ் முழக்கம் வெல்லும்' இதழை நடத்தியவர் சாகுல் அமீது.

 

2002ஆம் ஆண்டு, தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன்  உலகச் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். ஈழத்தின் மீதும் தலைவர் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது, தலைவரின் அந்த நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, 'தடா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 17 மாதங்கள் சிறைக்கொட்டடியில் வதைப்பட்டார். அதே ஆண்டின் தொடக்கத்தில் பழ.நெடுமாறன் எழுதிய, ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார் சாகுல் அமீது. இதுமட்டுமின்றி, பல்வேறு தமிழ்த்தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தன்னையொரு தமிழ்த்தேசியவாதியாக அடையாளப்படுத்திக்கொண்டு உறுதியாகக் களத்தில் நின்றதனால் இவரது தொழில்கள் முடக்கப்பட்டு, பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தார். பெரும் செல்வந்தராகி, கோடிகளில் புரளும் வாய்ப்பு கிடைத்தபோதும் அது எதிலும் நாட்டங்கொள்ளாது சிறைக்கொட்டடிகளைக் கண்டு கிஞ்சித்தும் அஞ்சாது தமிழ்த்தேசியத்திற்காக அயராதுப் போராடியவர் சாகுல் அமீது. இனத்தின் மீதும் மொழியின் மீதும் இருந்த தணியாத பற்றினால் பாரிய இழப்புகளைச் சந்தித்தபோதும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது தமிழ்த்தேசியக் களத்தில் தனது பணியினைத் தொடர்ந்தார்.

 

தமிழ்தேசியத்திற்கென்று ஒரு வலிமையான தேர்தல் அரசியல் கட்சி உருவாகும் முன்னே எவ்வித பொருள், பதவி பற்றற்று 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த்தேசியக் களத்தில் பணியாற்றிய பேராளுமை. இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். இராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு விசாரிக்கப்பட்ட மிக முக்கியத் தமிழ்த்தேசியவாதிகளில் சாகுல் அமீதும் ஒருவர்.

 

கால் நூற்றாண்டுக்கு மேலாக நேரடி அரசியலில் ஈடுபட்டு அதன் விளைவாகவே பெரும் நெருக்கடிகளையும், இடையூறுகளையும், பொருளாதார இழப்புகளையும், அதனால் குடும்பத்தினர் வருத்தத்திற்குள்ளான போதும் தன் தனிப்பட்ட இழப்புகளால் சோர்வடைந்துவிடாமலும், இன்னல்களுக்கு அடிபணிந்து விடாமலும் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்கான தனது பணியினைத் செவ்வனே தொடர்ந்து வருகிறார்.

 

அண்மையில் கஜா புயலில் சிக்குண்டு பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு ஆளும் கட்சிகள் ஆண்ட கட்சிகள் அவற்றிற்குத் துணை போன கட்சிகள் என்று எந்த அரசியல் கட்சியும் செய்யாத அளவுக்கு, தம் ஆற்றலையும் மிஞ்சிய அளவில் விரைந்து செயற்பட்ட நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளில் முன்னின்ற களப்பாணியாளர்களில் சாகுல் அமீதும் ஒருவர். 

 

தமிழ்த்தேசிய அரசியல் மீதும், மண்ணுக்கும் மக்களுக்குமான நாம் தமிழர் கட்சியின் கொள்கை மீதும் அளவற்ற ஈடுபாடும், தெளிவானப் பார்வையும் கொண்டவர் சாகுல் அமீது. அந்த வகையில் திருவாரூர் இடைத்தேர்தல் வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் அறிவிக்கப்பட்டுள்ள ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது  தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கான மிகச்சரியான பொருத்தமான தேர்வாகும்.

 

ஆகவே, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர்களே! உங்கள் மதிப்பிற்குரிய வாக்குகளை 'இரட்டை மெழுகுவர்த்தி' சின்னத்தில் செலுத்தி அவரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள்!  இந்த வாக்கு நம் மண் காக்கும்! மானம் காக்கும்! நாளைய தலைமுறையைக் காக்கும்!’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்