Skip to main content

பள்ளிகளின் பித்தலாட்டங்கள். – அதிகாரத்தை கண்டு மிரளும் கல்வித்துறை..?

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலமாக சமூக நலத்துறை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பிப்ரவரி 18ந்தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கொடியசைத்து அந்த பேரணியை தொடங்கிவைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த சுமார் 1000 மாணவ - மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

திருவண்ணாமலையில் உள்ள பிரபல பள்ளிகளான டி.வி.எஸ் அகடாமி, தி பாத், விக்னேஷ், ஜீவாவேலு, எஸ்.கே.பி வனிதா, கெங்குசாமி, காந்திநகர், எஸ்.ஆர்.ஜீ.டி.எஸ் என பேரணியில் தனியார் பள்ளி மாணவிகள், மாணவர்கள் என அடுத்தடுத்து வந்தனர். கடைசியில் அரசு பள்ளி மாணவிகள் வந்தனர். பேரணியில் பெண் குழந்தைகள் கல்வி குறித்த விழிப்புணர்வு தட்டிகளை ஏந்தியபடி நடந்து சென்றனர். இந்த பேரணியை பார்த்த சமூக ஆர்வலர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

 

thiruvannamalai school girls awareness rally

 

 

இதுபோன்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றால் பிரபலமாகவுள்ள டி.வி.எஸ் அகடாமி, தி பாத், விக்னேஷ் இன்டர்நேஷ்னல், ஜீவாவேலு, எஸ்.கே.பி வனிதா போன்ற பிரபல தனியார் பள்ளிகள் தங்களது மாணவ – மாணவிகளை பெரும்பாலும் அனுப்பாமல் ஏதாவது காரணம் சொல்லி தட்டி கழித்துவிடும். அதற்கு காரணம், தங்களது பள்ளியில் படிப்பவர்கள் எல்லாம் பணக்கார வசதியான வீட்டு பிள்ளைகள், இவர்கள் தெருவில் கோஷமிட்டபடி நடந்தால் தங்களது பள்ளியின் தரம் என்னவாவது என்கிற ஈகோ தனத்தால் அனுப்புவதில்லை என்ற கருத்து உள்ளது.

காந்திநகர் மேல்நிலைப்பள்ளி, வி.டி.எஸ் மேல்நிலைப்பள்ளி, டேனிஷ் பள்ளி, நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, தியாகி அண்ணாமலை மேல்நிலைப்பள்ளி போன்ற சில பள்ளிகள் தான் தொடர்ச்சியாக அரசின் விழிப்புணர்வு பேரணிகளுக்கு, நிகழ்ச்சிகளுக்கு மாணவ – மாணவிகளை அனுப்பும். அதனை வைத்து கல்வித்துறை, சமூக நலத்துறையினர் விழாவினை நடத்துவார்கள். அப்படிப்பட்ட நிலையில் தற்போது எப்படி பிரபலமான தனியார் பள்ளிகள் மாணவ – மாணவிகளை இந்த பேரணிக்கு அனுப்பியது என கேள்வி எழுந்தது.

இதுப்பற்றி கல்வித்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் நாம் கேட்டபோது, 2020-2021 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவ – மாணவியர் சேர்க்கையில் தற்போது தனியார் பள்ளிகள் தீவிரமாக உள்ளன. பல பிரபல தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் பெற்றோர்களிடம் வாங்குகிறது. அதோடு, எங்க பள்ளிக்கு சமுதாயத்தில் நல்ல பெயருள்ளது, உங்க பசங்க இங்க படிக்க நன்கொடை தந்தால் தான் சேர்ப்போம் எனச்சொல்லி வாங்குகின்றன. நன்கொடைகளுக்கு பில் தருவதில்லை.

உதாரணமாக இந்தியாவின் பெரும் பணக்கார நிறுவனமான டி.வி.எஸ் நிறுவனம், டி.வி.எஸ் அகாடமி என்கிற பெயரில் திருவண்ணாமலையில் பள்ளி நடத்துகிறது. இந்த பள்ளியில் புதியதாக மாணவர் சேர்க்கைக்கு கல்வி கட்டணம் உட்பட பிற கட்டணம் இல்லாமல் நன்கொடை தரவேண்டும் என வெளிப்படையாக கேட்கிறது பள்ளி நிர்வாகம். இதுப்பற்றி அரசுக்கு புகார் சொன்னால் நாளை தமது பிள்ளைகளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என புகார் சொல்லாமல் அந்த பள்ளியை விரும்புகிறவர்கள் தங்களது பிள்ளையை சேர்க்கிறார்கள். அதுப்பற்றி தெரிந்தும் பெரிய பணக்காரரின் நிறுவனம் என்பதால் கல்வித்துறை அதிகாரிகள் அந்தப்பக்கமே போவதில்லை என கூறப்படுகிறது. இந்த பள்ளியை பார்த்து வேறு சில பிரபல பள்ளிகள் நேரடியாகவே நன்கொடை கேட்காமல், கல்வி கட்டணம் என்கிற பெயரில் லட்ச ரூபாய் வரை எல்.கே.ஜிக்கு வாங்குகின்றன.

நன்கொடை வாங்குவது, அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை விட அதிக கட்டணம் வாங்குவது, பேருந்துகளில், வேனில் அடைத்து வைத்து அழைத்து வந்தாலும், மாணவ – மாணவிகள் ஏற்றி வரும் வாகனங்கள் பரிசோதனையின் போது சிக்கல் வராமல் காத்துக்கொள்ளவும், மத்தியரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25 சதவித ஏழை குழந்தைகளுக்கு ஒவ்வொரு பள்ளியும் கல்வி கட்டணம் வாங்காமல் சேர்க்கை நடத்த வேண்டும் என்கிற விதியை கடைப்பிடிக்காமல் இருப்பதை கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு பேரணிக்கு பிரபல பள்ளிகள் தங்களது பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகளை அனுப்பிவைத்துள்ளார்கள் எனவும், மக்கள் நலனில் பள்ளிகளுக்கு எவ்வளவு அக்கறை பார் என மக்கள் பேசுவார்கள், அதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் இலவசமாக தங்களது பள்ளிக்கு விளம்பரம் கிடைப்பதால் அனுப்புகிறார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

மாணவ – மாணவியர் சேர்க்கை முடிந்ததும், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக அதன்பின் அனுப்பமாட்டார்கள். மீண்டும் அடுத்தவருடம் மாணவ – மாணவியர் சேர்க்கை நடைபெறும் போது அனுப்புவார்கள் என்றார். 

இப்படிப்பட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் பிள்ளைகளுக்கு என்ன கற்றுதருவார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.