Thiruvannamalai Polur VAO Bribe issue

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்காவுக்கு உட்பட்ட மண்டகொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். கடந்த 2023 அக்டோபர் மாதம் ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு சென்று இலவச வீட்டுமனை பட்டா வேண்டும் எனக்கேட்டு மனு தந்துள்ளார். அந்த மனுமீது விசாரணை நடத்த வட்டாட்சியர் மண்டகொளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) இருளப்பனுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் விசாரணை நடத்தி வீடு இல்லை எனச்சொல்லி அறிக்கை தந்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு 6.11.2023ஆம் தேதி அரசு அதிகாரிகள், கணேசன் மற்றும் அவரது மனைவி முனியம்மாள் பெயரில் தோராய பட்டா வழங்கியுள்ளனர்.

Advertisment

பட்டா வாங்கியதற்காக ஒரு பட்டாவுக்கு 40 ஆயிரம் என இரண்டு பட்டாவுக்கு 80 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் வி.ஏ.ஓ இருளப்பன். விவசாயியான கணேசன், என்னிடம் அவ்வளவு பணமில்லை. 20 ஆயிரம் ரூபாய் தருகிறேன் எனச் சொல்லியுள்ளார். 80 ஆயிரம் தந்தே ஆகவேண்டும் என்றுள்ளார் இருளப்பன். இது இழுபறியாகவே இருந்துள்ளது.

Advertisment

இந்நிலையில் கடந்த 30.1.2024 ஆம் தேதி கணேசன் தனது நிலத்தில் இரண்டு ஏக்கர் கரும்பு பயிர் வைத்துள்ளார். இதனை அடமானமாக வைத்து மண்டகொளத்தூர் கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வாங்கவேண்டி அதற்காக நிலத்துக்கான அடங்கல் கேட்டு வி.ஏ.ஓ அலுவலகம் சென்றார். அங்கே கிராம நிர்வாக அலுவலர் இருளப்பன், 51 வயதான கணேசனை மரியாதை இல்லாமல் ஒருமையில் மிக கொச்சையாக பேசி திட்டியுள்ளார். “வீட்டுமனை பட்டா வாங்கி தந்த எனக்கு தரவேண்டிய பணத்தினை தராமல் இருக்கறவன்தானே நீ. உனக்கு அடங்கல் வேண்டும் என்றால் ஏற்கனவே நீ கொடுக்க வேண்டிய லஞ்சம் பணம் ரூபாய் 80 ஆயிரம் கொடுத்தால் தான் அடங்கல் தருவன் இல்லன்னா தரமுடியாது. உன்னால் என்ன செய்யமுடியுமோ செய். நான் நினைச்சாதான் இங்க உன் வேலை நடக்கும், இல்லன்னா ஒன்னும் நடக்காது வெளிய போய்யா” என மிரட்டியுள்ளார்.

என்னால் அவ்வளவு பணம் தர இயலாது என கணேசன் கண்ணீர் விட்டு அழுதபின், “இப்போ 40 ஆயிரம் ரூபாய் தந்துட்டு அடங்கல் வாங்கிக்கிட்டு போ. மீதி பணம் பிறகு கொடு” என்று சொல்லி அனுப்பியுள்ளார். இவரும் சரியெனச்சொல்லிவிட்டு வந்துள்ளார்.

Advertisment

தன்னை அவமானப்படுத்தி அழவைத்தவரை விடக்கூடாது என முடிவு செய்தவர் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. வேல்முருகனை சந்தித்து புகார் தந்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து ரசாயனம் தடவிய 40 ஆயிரம் ரூபாய் தந்து அனுப்பினர். அந்த பணத்தோடு பிப்ரவரி 3ஆம் தேதி மாலை வி.ஏ.ஓ.வின் செல்போனுக்கு தொடர்புகொண்டு பணம் ரெடி செய்துவிட்டேன் என்றுள்ளார் கணேசன். “பணத்தை எடுத்துக்கிட்டு போளூர் தாலுக்கா அலுவலகத்துக்கு வந்துடு அங்கதான் இருக்கேன்” என்றுள்ளார் இருளப்பன்.

அங்கே சென்று பணம் கொடுத்ததும் அதனை வாங்கி எண்ணி இருளப்பன் தன் பாக்கெட்டில் வைத்ததும், அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி வேல்முருகன் தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், இருளப்பனை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர்.