திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ளது கோவிலூர் கிராமம். மலைப்பகுதிக்குள் மீண்டும் காட்டு யானைகள் வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 27ந்தேதி கோவிலூர் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை ஒன்று, அங்குள்ள 5 வீடுகளை சேதப்படுத்தியது.
இதுபற்றிய தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இவர்கள் அனைவரும் ஏழை பழங்குடியின மக்களாவர். இவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதுப்பற்றிய தகவல் திருவண்ணாமலை திமுக தெற்கு மா.செவும், முன்னால் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ கவனத்துக்கு இந்த தகவலை ஜம்னாமத்தூர் திமுக ஒ.செ. கேவசன் கொண்டு சென்றார்.
அதனை தொடர்ந்து கலசபாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளரான மருத்துவர் எ.வ.வே.கம்பனிடம் உதவி செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, யானையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரொக்கமும், அரசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
யானை மீண்டும் வந்துவிடுமோ என்கிற பயம் மலைவாழ் மக்களிடம் இருப்பதால் நிலங்களில் உள்ள வீடுகளில் இல்லாமல் ஊருக்குள் வந்து தங்கியுள்ளனர். அந்த ஒற்றை யானையை உள் பகுதிக்கு விரட்டும் வேலைக்காக வனத்துறையினர் யானையை தீவிரமாக தேடி வருகின்றனர்.