கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஏழை மக்களின் நிலையை உணர்ந்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணியில் தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிருமி நாசினிகள், கையுறை, முகக் கவசங்கள் போன்றவற்றை வழங்கினார்கள். அதுமட்டுமில்லாமல் மக்களுக்காக உழைக்கும் பிற அரசுத் துறையினருக்குத் தேவையான உதவிகளையும் செய்யத் துவங்கியுள்ளனர்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி. இவர் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களைப் போன்று 24 மணி நேரமும் மக்களுக்காகப் பணியாற்றும் மின்துறை ஊழியர்கள் கரோனா சமயத்திலும் முகக் கவசம், கையுறை போன்றவை இல்லாமல் செல்வதைப் பார்த்து தனது சொந்த செலவில் வாங்கிய முகக் கவசங்களை திருவண்ணாமலை மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) ராஜசேகரிடம் வழங்கினார்.