Skip to main content

பாஜகவின் குடியுரிமை சட்ட ஆதரவு பேரணிக்கு அழைத்து வரப்பட்ட யாசகர்கள்!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

தமிழகம் முழுவதும் இந்திய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி என அறிவித்தது மாநில பாஜக தலைமை. அதன்படி பிப்ரவரி 28ந்தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் பாஜக பேரணி நடத்தியது.

 

Thiruvannamalai BJP rally issue

 



திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 28ந்தேதி மாலை 5 மணிக்கு, மாவட்ட கூட்டுறவு பால் குளிரூட்டும் நிலையம் முன்பிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பாஜக மாநில ஊடக பிரிவு செயலாளரான பிரசாந்த் முக்கிய பிரமுகராக கலந்துக்கொண்டார்.

இந்த ஊர்வலத்துக்கு காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு எழுதி தந்து அனுமதி கேட்ட பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம், அதிகாரிகளிடம் மாவட்டம் முழுவதிலும்மிருந்து 2 ஆயிரம் பேர் வந்து கலந்துக்கொள்வார்கள் எனக்கூறியிருந்தார். மத்தியில் ஆளும்கட்சி, மாநிலத்தில் கூட்டணி கட்சியான அதிமுக ஆட்சியில் இருப்பதால் பாஜக நடத்தும் பேரணிக்கு பாஜக தலைவர் சொன்னதைப்போலவே கூட்டம் வரும் என முடிவெடுத்தனர் காவல்துறை அதிகாரிகள்.

 

Thiruvannamalai BJP rally issue

 

 

திருவண்ணாமலை – வேலூர் சாலையில் வாகன போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. 3 மணிக்கெல்லாம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான சிபிசக்கரவர்த்தி தலைமையில் 500 போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். 4ம ணிவரை மாவட்டம் முழுவதிலும்மிருந்து 200 பாஜக தொண்டர்கள் தான் பேரணிக்கு என வந்துயிருந்தனர். திடீரென சில குட்டியானைகளில் பெண்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டார்கள். 400 பேர் அளவுக்கு கூட்டம் சேர்ந்தது. இதில் திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் காவி உடை தரித்து அமர்ந்துயிருக்கும் யாசகர்கள் 25 பேரை ஊர்வலத்தில் அழைத்து வந்து நிறுத்தினர் உள்ளுர் பாஜகவினர்.

மக்களை திசை திருப்பும் திமுக ஒழிக, நாட்டுக்கு நல்லது செய்யும் மோடி வாழ்க என குரல் எழுப்பியபடி 500 மீட்டர் தூரத்துக்கு பேரணி நடத்தினர். மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் வாயிலில் சி.ஏ.ஏ ஆதரவு கூட்டம் நடத்தினர். அங்கு பேரணி திமுக கூட்டணியை எதிர்க்கும் பேரணி என்றார்கள் பேசிய அனைவரும். அதன்பின்னர் பாஜக நிர்வாகிகள் 5 பேர், மாவட்ட ஆட்சியர் அறைக்கு சென்று இந்திய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து மனு தந்துவிட்டு வந்தனர். 400 பேருக்கு, 500 போலீஸ் பாதுகாப்பா என நொந்துப்போனார்கள் பாதுகாப்புக்கு வந்து சுட்டெரிக்கும் வெய்யிலில் 4 மணி நேரம் டூட்டி பார்த்த இளம் காக்கிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.