Skip to main content

திருந்தி வாழ்ந்த நபர் படுகொலை; பட்டப் பகலிலேயே பரபரத்த திருவான்மியூர்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Thiruvanmiyur is bustling with incident

சென்னை திருவான்மியூரில் பட்டப்பகலில் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (35). இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார். ரவுடியாக இருந்த டில்லி பாபு திருந்தி சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

பேட்டரி வாகனம் மூலம் குப்பைகளைச் சேகரித்துக் கொண்டு செல்லும் பணியை இவர் மேற்கொண்டு வந்தார். இன்று வழக்கம்போல பணியை முடித்துவிட்டு பேட்டரி வாகனத்தை விடுவதற்காக திருவான்மியூர் எல்.வி. சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மறைந்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவருடைய வாகனத்தை இடைமறித்து அவரைக் கீழே இறக்கி சரமாரியாகக் கத்தியால் வெட்டி பட்டப் பகலிலேயே படுகொலை செய்துவிட்டுத் தப்பித்தனர்.

ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த டில்லிபாபுவை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த டில்லி பாபுவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற நபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. டில்லி பாபு ரவுடியாக இருந்து திருந்தி தற்பொழுது தூய்மைப் பணியாளராக ஒப்பந்தப் பணியில் இருந்த நிலையில், அருண் செய்யும் தவறுகளை காவல்துறைக்கு இவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்கனவே இருந்த முன்விரோதம் அதிகரித்துள்ளது. இந்த முன் விரோதத்தின் காரணமாக டில்லி பாபுவை அருண் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக நவீன், குபேரன் ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அருண் உள்ளிட்ட மற்ற ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருவான்மியூரில் பட்டப் பகலிலேயே தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.