Skip to main content

சாலையின் நடுவே மூடப்படாத குழிகள்... அலட்சியம் காட்டும் மாநகராட்சி...

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

சென்னை மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டை சாலையில், குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்காக சாலையின் நடுவே சுமார் 6 அடி ஆழத்திற்கு இரண்டு குழிகள் தோண்டப்பட்ட நிலையில், பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படாமல், குழியும் மூடப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

thiruvalluvar pet metro water issue

 

 

மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களது தண்ணீர் தேவைகளுக்காக மாநகராட்சி நீரையே இப்பகுதி மக்கள் பெரிதும் சார்ந்திருந்த நிலையில், கடந்த 2017 ஆம் புயலுக்கு பின்பு இப்பகுதியில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக அருகிலுள்ள தெருக்களுக்கு சென்றே நீர் எடுத்துவர வேண்டிய நிலை அங்கு நிலவி வந்துள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 4 ஆம் தேதி அன்று இப்பகுதிக்கு வந்த மாநகராட்சியின் ஒப்பந்த பணியாளர்கள், திருவள்ளுவர் பேட்டை சாலையின் இரண்டு இடங்களில் சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு நீர் செல்லும் குழாய்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், குழாயில் இருக்கும் அடைப்பை சரி செய்து, பராமரிப்பு பணிகளை செய்ய 'ஜெட் ராடர்' இயந்திரம் தேவைப்படும் என அங்கு வந்த நபர்கள் கூறியதுடன், நவம்பர் 5 ஆம் தேதி அந்த இயந்திரம் வந்து பராமரிப்பு பணிகள் முடிவடையும் என கூறியுள்ளனர். ஆனால் ஒரு வாரம் கடந்த நிலையில், குழாயை சரிசெய்யும் பணி நடைபெறவில்லை. அதேநேரம் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் அப்படியே விடப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அப்பகுதியை கடப்பதற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நீர் விநியோகத்தை தொடங்குவதற்காக இந்த பராமரிப்பு பணியை விரைந்து முடித்து, சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூட வேண்டும் என மாநகராட்சிக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். தமிழகத்தில் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், சாலையின் நடுவே பள்ளங்களை தோண்டி வைத்துவிட்டு மாநகராட்சி ஊழியர்கள் அதனை மூடாமல் அலட்சியம் காட்டி வருவது திருவள்ளுவர் பேட்டை பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பல கோடி ரூபாய் வரி பாக்கி; சிக்கிய மத்திய அரசு நிறுவனம்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
12 crore in tax arrears; Chennai Corporation Notice to Central Govt

கோடிக்கணக்கில் சொத்து வரி நிலுவையில் வைத்திருந்த மத்திய அரசின் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தின் முகப்பில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி விட்டு சென்றனர். வரிபாக்கி நிலுவை காரணமாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. மொத்தமாக 10.3 கோடி சொத்து வரியை செலுத்தாமல் போர்ட்ரஸ்ட் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததால் சென்னை மாநகராட்சி இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே நிலுவையில் உள்ள வரியை செலுத்த வேண்டும் என பலமுறை சுற்றறிக்கை அனுப்பியும் வரி செலுத்த முன் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 'குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் போர்ட் டிரஸ்ட் நிறுவனம் சொத்து வரியை செலுத்த முன் வராமல் இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய பாக்கியாக 10.3 கோடி ரூபாய் சொத்து வரியோடு, நடப்பாண்டில் செலுத்த வேண்டிய 2.2 கோடி ரூபாய் என மொத்தமாக 12. 5 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களிடம் சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை வசூலிப்பதை தீவிரப்படுத்தாமல் இருந்த நிலையில், மார்ச் 31ம்  தேதியுடன் இந்த நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்தக்கூடிய அவகாசம் முடிவடைகிறது. இதனால் பல பகுதிகளில் பல்வேறு வரி பாக்கிகளை மாநகராட்சி வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Next Story

சென்னை மாநகராட்சிக்கு அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
The High Court fined the Chennai Corporation

திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொண்ட சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (27.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகாரம் உள்ளவர்கள் தான் வாழ முடிகிறது. சாதாரண மக்களால் சிறிய அளவில் வீடு கட்ட வேண்டும் என்றால் கூட லஞ்சம் கேட்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA) ஆகியவற்றுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2 லட்ச ரூபாயும், தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் இந்த அபராத தொகையான ரூ. 37 லட்சத்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.