உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்த காரணத்தை வைத்து ஊழலில் மிதந்த அதிகாரிகளுக்கு இப்போது தேர்தல் முடிந்து தலைவர்களை பதவியேற்று முடிவடைந்தநிலையில் யாரும் கேள்வி கேட்க முடியாது என்று இருந்த ஊராட்சி செயலாளர்களுக்கு ஊழல் காய்ச்சல் வந்துள்ளது. அதன் முன்னோட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. தான் செய்த ஊழலை மறைக்க கோப்புகளை தீவைத்து எரித்ததாக ஊராட்சி செயலாளரை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடதியுள்ளனர்.

Advertisment

thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூங்குளம் ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமார். ஏற்கனவே இவர் மீது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரிந்தவர்களுக்கு சேரவேண்டிய ஊதியத்தை முறைகேடாக கையாடல் செய்தது, தெருவிளக்கு, குடிநீர் குழாய், கொசு மருந்து தெளித்தல் போன்ற அடிப்படை வசதி எதையும் செய்யாமலே பொய்க்கணக்கு எழுதியதாகவும் புகார் இருந்து எழுந்தது.

Advertisment

இந்த நிலையில் பூங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக 06.01.2019 திங்கள்கிழமை ரோஜா என்பவர் பதவியேற்ற நிலையில், அதற்கு முதல்நாள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு, ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து அங்கிருந்து ஆவணங்களை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளார் என்று செந்தில்குமார் மீது ஊர் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

புதிதாக பொறுப்புக்கு வரும் ஊராட்சி மன்றத்தலைவர் கணக்கு வழக்குகளை பார்த்தால், தான் செய்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் ஆவணங்களை எரித்ததாகவும், இதனை பார்த்த தாங்கள் ஊராட்சி செயலாளர் செந்தில்குமாரை சிறைப்பிடித்ததாகவும் கூறுகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது தொடர்பாகவும் ஏற்கனவே நடைபெற்ற ஊழல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையான விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கிராம மக்களின் பிடியிலிருந்து ஊராட்சி செயலாளரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டு சென்றனர்.