/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thirumulllaiyavayal-fir-art.jpg)
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பிரபல தின்னர் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் யாரும் எதிர்பாராத விதமாக இன்று (21.12.2024) மதிய நேரத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது நிறுவனத்தில் உள்ள பிற பகுதியிலும் பரவி உள்ளது. மேலும் அருகில் உள்ள பள்ளிக்கும் தீயானது பரவியது. இதனால் அந்தப் பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, வில்லிவாக்கம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக தீயானது பள்ளி வளாகத்தில் பரவியதை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் மாணவர்களைப் பள்ளியில் இருந்து அவசர அவசரமாக அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் இருந்து பொதுமக்களையும் காவல்துறை வெளியேற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)