திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உமராபாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது மிட்டாளம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் அஜீத். இவரை சில மாதங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்பனை வழக்கில் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீன் பெற்று வெளியே வந்தார் அஜீத். இவர் மீது கள்ளச்சாராயம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.
அஜீத் தாய்மாமன் ஜானகிராமனும் கள்ளச்சாராய வியாபாரியாக உள்ளார். அந்த ஜானகிராமனும் கடந்த மாதம் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 16.8.2020 அன்று சாராய வியாபாரி அஜித் தனது பிறந்தநாளை வீட்டில் நண்பர்கள், உறவினர்களுடன் கொண்டாடினார். இதில் உமராபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஸ்வநாதன் கலந்து கொண்டுள்ளார். வருகை தந்த அதிகாரிக்கு சால்வை அணிவித்து வரவேற்பு தந்துள்ளார் அஜித். பதிலுக்கு சாராய வியாபாரிக்கு, எஸ்.ஐ. கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரகசிய தகவல் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு கிடைத்து. பிறந்த நாள் விழாவில் சாராய வியாபாரிக்கு எஸ்.ஐ. கேக் ஊட்டும் படமும் அவருக்கு அனுப்பியுள்ளனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
முதல்வர் வரும் நேரத்தில் இது சர்ச்சையானால் பிரச்சனையாகிவிடும் என்பதை உணர்ந்து, உடனே விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். விசாரணையில் அனைத்தும் உண்மை எனத் தெரியவர, எஸ்.ஐ. விஸ்வநாதனை ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் எஸ்.பி. விஜயகுமார்.