Skip to main content

வறுமையில் கொடுமை... பச்சிளங்குழந்தையை தந்தையே விற்ற அவலம்...

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே அமைந்துள்ள ஆறுமுகம்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசு. இவருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அடுத்து புஷ்பலதா என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சிலுவைக்கனி, மஞ்சுளா என்ற இரண்டு மகள்களும் ஆறுமுகம் என்ற மகன் உட்பட 3 குழந்தைகள் உள்ளன. ஜேசு கூலிவேலை பார்த்து குடும்பத்தை நகர்த்துபவர். வறுமையின் துரத்தலுடன் அவரது குடும்ப வாழ்க்கை ஓடியிருக்கிறது என்கிறார்கள்.

 

thirunelveli baby issue

 

 

இந்நிலையில் புஷ்பலதா மீண்டும் கர்ப்பமானார். நெல்லை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு கடந்த 17 நாட்களுக்கு முன்னர், ஆண்,பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தச் சூழலில் வருமானக் குறைவு காரணமாக குடும்பத்தை நகர்த்த மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனிடையே சம்பவத்தன்று 3 பிள்ளைகளும் பள்ளிக்குச் சென்றுவிட புஷ்பலதா இரட்டைக் குழந்தைகளுடன் வீட்டில் படுத்திருந்தார். அப்போது வந்த கணவர் ஜேசு, அதில் பெண் சிசுவை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றார். எங்கே கொண்டு போகிறீர்கள் என்று மனைவி கேட்டதுக்கு, தடுப்பு ஊசி போடுவதற்காக எடுத்துச் செல்கிறேன் என்றிருக்கிறார் இதில் சந்தேகமடைந்த மனைவி புஷ்பலதா சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் இரவு வரை தேடியும் ஜேசுவும் குழந்தையும் கிடைக்கவில்லை. இதனையடுத்து புஷ்பலதா வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் ஆறுமுகப்பட்டியில் பதுங்கியிருந்த ஜேசுவைப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் வறுமை காரணமாக பெற்ற பெண் குழந்தையை தரகர் ஒருவர் மூலம் ஆலங்குளத்திலுள்ள தங்கராஜ் என்பவரிடம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு விற்றதாக கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசார் ஆலங்குளத்திலுள்ள தங்கராஜின் வீட்டிலிருந்து பெண் குழந்தையை மீட்டனர்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தந்தை ஜேசு, குழந்தையை விலைக்கு வாங்கிய தங்கராஜ், தரகர்களான நெல்லையப்பன், கண்ணன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். ஜேசுவிடமிருந்து 48 ஆயிரம் ரொக்கம், 32 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு அம்பை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

ஆலங்குளம் காப்பகத்தில் வைக்கப்பட்ட பெண் குழந்தை நீதிமன்ற உத்தரவுப்படி தாயிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது. 

Next Story

“தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது” - பிரதமர் மோடி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
PM Modi says DMK-Congress hates Tamil culture

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “தமிழ் புத்தாண்டு தினத்தில் பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. தமிழ் மொழியை பா.ஜ.க உலக அளவில் பிரபலப்படுத்தும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் மையங்களை அமைக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது. தமிழ் கலாச்சாரம் மீது திமுக காங்கிரஸுக்கு வெறுப்பு உள்ளது. குடும்ப கட்சியான காங்கிரஸ், காமராஜரை அவமதித்தது. எம்.ஜி.ஆர் புகழை திமுக அவமதித்தது. ஜெயலலிதாவை சட்டசபையில் மோசமாக நடத்தியது.

பா.ஜ.க மற்றும் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதை திமுக அரசு தடுக்கிறது. திமுகவும், காங்கிரஸும் தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமாக கச்சத்தீவை வேறொரு நாட்டுக்கு கொடுத்துவிட்டனர். கச்சத்தீவை தாரைவார்த்தது மன்னிக்க முடியாத பாவம். குடும்ப அரசியலை ஆதரிக்கும் கட்சியின் ஊழல் ஆட்சியால் தமிழ்நாடு துன்பப்படுகிறது” எனப் பேசினார்.