தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டார். தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், திருச்சியில் உள்ள அலுவலக பதாகையில் அவரது உருவப்படம் வைக்கப்படாமல் இருந்தது. திருநாவுக்கரசர் படத்தை மாற்றிவிட்டு அழகிரி படத்தை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் கூறினர். ஆனால் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களோ கே.எஸ்.அழகிரி படம் வைக்கப்பட்டாலும், அதன் அருகே திருநாவுக்கரசர் படமும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில் கடந்த 1ஆம் தேதி திருச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த திருநாவுக்கரசர் படம் தார்பூசி அழிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அந்த பதாகை உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் அதே இடத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி படத்துடன்கூடிய பதாகை வைக்கப்பட்டது.
திருநாவுக்கரசர் திருச்சியில் போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், கட்சிக்குள் அவருக்கு எதிராகவே இந்த சிலர் செயல்படுவது அவரது ஆதரவாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
கோஷ்டி பூசல் காரணமாக கட்சியினரே இத்தகைய செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு யாரும் காரணமா? என திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.