Skip to main content

“திமுக இல்லாததால் கூட்டணியில் பிளவு என நம்ப வேண்டாம்” - திருமாவளவன் எம்.பி

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

thirumavalavan talk about nlc and dmk alliance

 

என்.எல்.சி விரிவாக்கத்துக்காக குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கும் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கும் உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, குடியிருக்க மாற்று இடம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சி விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜாவாஹிருல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜீ, ம.க.இ.க இயக்க பிரச்சாரப் பாடகர் கோவன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் சங்கங்களின் பிரதிநிதிகள், பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்தனர். 

 

நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய பேரணி முடிவில் மத்திய பேருந்து நிலையம் எதிரே பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் தி.வேல்முருகன் பேசும்போது, “இந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 17 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று மனு அளிக்க உள்ளோம். கடந்த காலங்களில் என்.எல்.சி நிர்வாகத்தோடு பிரச்சனை ஏற்பட்ட போது அப்போதைய முதலமைச்சர் கலைஞர் பிரச்சினைகளை பேசி தீர்த்து வைத்தார்.

 

தற்போது இங்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக விவசாயிகள், தொழிலாளர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வரவேண்டும். இதன் மூலம் விவசாயிகள் வாழ்வில், அவர்களது வயிற்றில் பால்வார்க்கும் வாய்ப்பு தமிழக அரசுக்கு கிடைக்கும். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையை வைத்துக்கொண்டு மக்களை மிரட்டி நிலத்தைக் கையகப்படுத்த என்.எல்.சி முயற்சிக்கிறது. இந்த நிலையை என்.எல்.சி நிர்வாகம் கைவிட வேண்டும். மக்களை மிரட்டினால் அங்கு அனைத்து கட்சி தலைவர்களும் வருவார்கள் என்று அச்சம் என்.எல்.சிக்கு ஏற்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த பொதுக்கூட்ட பேரணி நடத்தினோம்" என்றார்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “என்.எல்.சி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இந்த பகுதி மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளை வழங்குவதில்லை. என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும் என்று பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போராட்டம் நடத்தப் போவதாகச் சொல்லி உள்ளார். அவ்வாறு போராட்டம் நடத்தினால் என்.எல்.சி நிறுவனம் தனியார் மயமாக்கப்படும். என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கு இழப்பீட்டு தொகையும், வேலைவாய்ப்பும் வழங்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில், “என்.எல்.சி நிலம் கொடுத்த மக்களை வஞ்சித்து வருகிறது. தற்போது கூட்டணி அமைத்துள்ள இந்த அமைப்பு விவசாயிகளின் தொழிலாளர்களின் நலனைக் காக்க தொடர்ந்து போராடும்” என்றார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது, “என்.எல்.சிக்கு 65 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்கள் கூட இன்னும் முழுமையாக நிவாரணத் தொகை, வேலைவாய்ப்பு பெறவில்லை. என்.எல்.சி ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். என்.எல்.சியால் நிலம் கையகப்படுத்தப்படும் விவசாயிகளுக்கு அண்டை மாநிலங்களிலும் வேலைவாய்ப்பும், இலாபத்தில் பங்கும் தரவேண்டும. சிலர் இங்கு என்.எல்.சி நிறுவனம் வேண்டாம் என்கிறார்கள். வேண்டாம் என்றால் அது அதானிக்கு விற்கப்பட்டுவிடும். என்.எல்.சியை மூடுவதற்கு போராட்டம் தேவையில்லை. நாங்கள் அரசியல் காரணங்களுக்காக இந்த கூட்டணியை ஏற்படுத்தவில்லை. நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக இந்த கூட்டணி அமைத்துள்ளோம். இந்த பேரணி இப்பகுதி மக்களின் உரிமைகளை மீட்க போர் அணியாக மாறும். இங்கு தி.மு.க இல்லை. இதனால் அரசியல் பிளவு ஏற்பட்டுள்ளது என்று சிலர் திரித்து பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள். யாரும் அதை நம்ப வேண்டாம். ஆளும் கட்சியான திமுக போராட்டத்திற்கு வர இயலாது. நம்மோடு ஒத்த கருத்துள்ள தி.மு.க நம்முடைய போராட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும்"  என்றார்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர்கள் அறிவழகன், சிவக்குமார் மற்றும் தோழமை கட்சிகளின் அனைத்து அமைப்பின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் மற்றும் இடம் கொடுத்து பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட உள்ள கிராமங்களின் மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்