“இந்தியா முழுவதும் மோடி என்ற மாயையை மக்கள் உடைத்துள்ளார்கள்” - திருமாவளவன்

Thirumavalavan said People have broken illusion of Modi all over India

“இந்தியா முழுவதும் மோடி என்ற மாயையை இந்தத்தேர்தலில் மக்கள் உடைத்து உள்ளார்கள்” என விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமான அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 17வது சுற்றில் 1,00,656 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே கணித்தபடி 40க்கு 40 வெற்றி உறுதியாகிவிட்டது. அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி 225 இடங்களுக்கு மேல் முன்னிலையில் இருக்கின்றன, சென்ற முறை பாஜக தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது, மோடி ஒரு மாயை அது உண்மை அல்ல, என மக்கள் தெரிவித்துள்ளார்கள்

அதனால் அதிகப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்தியா கூட்டணி மக்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறது. இன்னும் பல சுற்றுகள் என்னவேண்டியுள்ளது. அது எப்படி வேண்டுமானாலும் அமையலாம். விழுப்புரம், சிதம்பரம் இரண்டு தொகுதிகளிலேயும் மக்கள் எங்களுக்கு வாக்களித்து தமிழகத்தில் ஒரு அங்கீகாரத்தை வழங்கி உள்ளார்கள்.

மாநில கட்சி என்ற ஒரு அந்தஸ்தைப் பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. யாருக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் குதிரை பேரத்திற்கு வழி வகுத்துள்ளது. இது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு தமிழக முதல்வர் தலைவர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் அதற்கான ஏற்பாடுகளை முன் நின்று செய்வார்கள் என நினைக்கிறேன்” கூறினார்.

Chidambaram Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe