Skip to main content

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
Thirumavalavan



சமூகநீதியைக் காப்பாற்றவும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியன், திராவிடர் கழகத்தின் கலிபூங்குன்றன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

 

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து முன்னதாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

 

இந்திய சமூகத்தில் அனைத்து வகையிலும் முற்பட்ட வகுப்பைச் சார்ந்த பிராமணர், ராஜ்புத், ஜாட், பூமிகார், மராத்தா போன்ற சமூகப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கென பாஜக அரசு, பத்து சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி இருக்கிறது. 

 

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜக அரசு இந்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. அதிமுக, திமுக, சமாஜ்வாதி மற்றும் ஆர்ஜேடி போன்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இதனை வெளிப்படையாக எதிர்த்துள்ளன. பிற எதிர்கட்சிகள் யாவும் இதை நேரடியாக எதிர்க்க இயலாமல், அரசியல் நெருக்கடியால் ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவலம் இங்கே அரங்கேறியுள்ளது. 


 

Thirumavalavan



பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பொதுப்பிரிவினர் யாவரும் பயன்பெற வேண்டும் என்கிற வகையில்தான்,  இச்சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. இடஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பதற்கான ஒரு திட்டமல்ல. சமூக அடிப்படையில் நீண்டகாலமாக இழிவுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வரும் பல்வேறு சமூகப்பிரிவினர் யாவரும் அரசியல், சமூக, பொருளாதார விழிப்புணர்வைப் பெறுவதற்கும், சமூக இழிவுகள், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடுவதற்கேற்ற அதிகார வலிமையைப் பெறுவதற்கும் ஏதுவான வகையில் வரையறுக்கப்பட்ட ஒரு புரட்சிகர கோட்பாடு தான் சமூக நீதியாகும்.
 

எவர் ஒருவரும்  பொருளாதாரத்தில் உழைப்பின் மூலமாக மேம்பட்டுவிட முடியும். ஆனால், ஒருவரின் சமூகத் தகுதியை இவ்வாறு மேம்படுத்த இயலாது. கல்வியின் மூலமாகப் பெறும் சமூக விழிப்புணர்வின் அடிப்படையில் வெடித்தெழும் போராட்டங்களுக்குப் பின்னரே ஒட்டுமொத்த சமூகத்தின் சாதியமைப்பில் படிப்படியான மாற்றங்களை உருவாக்க முடியும். இந்த புரிதலின் அடிப்படையில் தான் சமூகநீதி கோட்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, சாதியின் பெயரால் பாதிக்கப்படுவோருக்கு இடஒதுக்கீடு என்னும் செயல் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 
 

இத்தகைய சமூகநீதி கோட்பாட்டை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டுமென்று நீண்டகாலமாகப் போராடி வரும் சதிக்கும்பல், மிகவும் நுட்பமாக தற்போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அவர்களின் நோக்கம் முற்பட்ட வகுப்பைச் சார்ந்த ஏழை எளியோரை மேம்படுத்துவது என்பதல்ல; மாறாக, சமூகநீதி கோட்பாட்டை அழித்தொழிப்பதே ஆகும். அதாவது, தற்போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஒரு பிரிவினருக்கு நடைமுறைப்படுத்திவிட்டால், காலப்போக்கில் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த முயற்சியாகும். 


 

Thirumavalavan



ஏற்கனவே, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ‘க்ரிமி லேயர்’ என்னும் பொருளாதார அளவுகோலை திணித்தவர்கள் தற்போது அதற்கும் ஒருபடி மேலாக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு சட்டத்தையே கொண்டு வந்துவிட்டனர். இனி வருங்காலத்தில் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்கிற கோட்பாட்டை நிலைநிறுத்த இது வழிவகுக்கும். 
 

எனவே, சாதியை ஒழிப்பதற்கான சமூகநீதி கோட்பாட்டைக் காப்பாற்றுவதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. 
 

இந்நிலையில், சமூகநீதியைக் காப்பாற்றவும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையைத் திணிக்கும் சதிமுயற்சியை முறியடிக்கவும் ஏதுவாக, சமூகநீதி சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் வரும் 11.1.2019 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இவ்வாறு கூறியிருந்தார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.