Skip to main content

“ஆர்.எஸ்.எஸின் இந்துத்துவா செயல் திட்டம்தான் பொதுசிவில் சட்டம்” - திருமாவளவன் எம்.பி

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Thirumavalavan MP opined that the Civil Code is similar to the agenda of the RSS

 

பொது சிவில் சட்டம் என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இந்துத்துவா செயல் திட்டத்தைப் போன்றது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். 

 

வேலூரில் நடைபெறும் திராவிட நட்புக் கழகத்தின் மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வேலூர் வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி  தனியார் ஓட்டல் அரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “வருகிற இருபதாம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான பெரும் முயற்சியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் என நான் நம்புகிறேன். பொது சிவில் சட்டம் என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இந்துத்துவா செயல் திட்டத்தைப் போன்றது. அதன் மூலம் மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்துவது என்பது தான் அவர்களின் உண்மையான உள்நோக்கம். இதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வருகிற 18 ஆம் தேதி பெங்களூருவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விசிக சார்பில் நான் கலந்து கொள்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு இக்கூட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே பீகாரில் நடைபெற்ற கூட்டத்தை அடுத்து இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது.

 

தமிழக முதல்வர் குடியரசு தலைவருக்கு ஆளுநர் குறித்து எழுதிய கடிதத்தை வரவேற்கிறோம். குடியரசுத் தலைவர் தமிழக முதல்வரின் கடிதத்திற்கு எதிர்வினை ஆற்றுவார் என நம்புகிறோம். குடியரசுத் தலைவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். சங் பரிவார அமைப்புகள் அவரை செயல்படாமல் கட்டுப்படுத்தக்கூடாது. ஆளுநர் அரசியல் அமைப்பின் சட்டப்பூர்வமான கடமைகளை செய்யத் தவறி சனாதனத்தை குறித்து நாள்தோறும் பேசி வருகிறார். ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது மட்டுமே அவரது நோக்கமாக உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளை அவர் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. சமூக நீதி, சமத்துவம், பெரியார், அம்பேத்கர் போன்ற பெயர்களையே உச்சரிக்க மறுக்கிறார். வள்ளலாரை சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் என செல்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மசோதா எவற்றையும் உடனடியாக ஒப்புதல் அளிப்பது இல்லை. ஏராளமான சட்ட மசோதாக்கள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்கிறார் என்பதற்கு இது எல்லாம் ஒரு சான்று. எனவே முதல்வரின் கடிதம் குறித்து குடியரசுத் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்; எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

 

ஆட்சியைக் கலைத்தாலும் கவலைப்பட மாட்டோம் என முதல்வர் பேசியது குறித்து கேட்டதற்கு, “இந்திய பாஜக அரசோடு சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவை இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதாக முதல்வரின் இந்த கூற்றைப் பார்க்கிறேன். அது வரவேற்கத்தக்கது. அவரின் கொள்கைப் பிடிப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது” என்று  பதிலளித்தார்.

 

டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து கேட்டதற்கு, “தமிழக காவல்துறையினர் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சங்கம் வைத்துக்கொள்ள உரிமை இல்லை உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் காவல்துறையினருக்கு உள்ளது. அவர்களுக்கும் பல அரசு ஊழியர்களைப் போல 8 மணி நேரம் வேலை என்ற நிலையைக் கொண்டு வர வேண்டும். 21 ஆம் நூற்றாண்டிலும் இப்படியான நெருக்கடிகள் காவல்துறைக்கு உள்ளது ஏற்புடையது அல்ல. நிர்வாக சீர்திருத்தம் தேவை. டிஐஜி விஜயகுமாரின் மரணம் மிகுந்த துயரத்தை தருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல. மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க அரசு ஆவணம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வேண்டுகோள் விடுகிறேன்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.