Skip to main content

'காதலும் என் மரண பயமும்!' - பாலரமணி நினைவேந்தல் நிகழ்வில் திருமாவளவன்

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

'Love and my fear of death!' - Thirumavalavan at the Balaramani commemoration event

 

கவியரசி ஆண்டாள் பிரியதர்ஷினியின் கணவரும், புகழ்பெற்ற சொற்பொழிவாளரும் கவிஞருமான கலைமாமணி பாலரமணியின் நினைவேந்தல் நிகழ்ச்சி, நேற்று (25.11.2021) மாலை சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடந்தது. பாலரமணியின் படத்தைத் திறந்துவைத்து தலைமையுரை நிகழ்த்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தனது உரையில் “ஆண்டாளின் தந்தையாரான பெருங்கவிஞர் நெல்லை ஆ. கணபதி, என் மாணவப் பருவதிலேயே எனக்கு நன்கு அறிமுகமானவர். என் மரபுக் கவிதைகளைப் படித்துப் பார்த்துப் பாராட்டி, என்னை நிறைய எழுதும்படி ஊக்கமூட்டியவர். உன்னிடம்  சொல்லாற்றல் இருக்கிறது என்று பாராட்டியவர். அவர் இல்லத்து நிகழ்ச்சியில், நான் பங்கேற்கும்போது, என் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. ஆண்டாளின் காதல், சாதி பார்த்து, மதம் பார்த்து, நிறம் பார்த்து மலர்ந்தது அல்ல. அது உண்மையான காதல். மேம்பட்ட காதல். அதன் விளைவுதான் இந்த நிகழ்ச்சி.

 

பாலரமணி, பிராமண சமூகத்திலே பிறந்தபோதும், சனாதன எதிர்ப்பாளராக இருந்தார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். அவரைப் பற்றித் தன் நினைவுக் கட்டுரையில் ஆண்டாள் குறிப்பிடும்போது, அவர் திராவிடக் காற்று என்றும் பேரன்பின் ஊற்று என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர், சனாதன எதிர்ப்புப் போராளியாக திகழ்ந்தவர் என்பதுதான் நம் எல்லோரையும் இங்கே இணைத்திருக்கிறது. 

 

மரணம் எல்லோருக்கும் வரும். மூப்பும், நோயும் வந்துதான் தீரும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதை உணர்ந்துதான் நாம் கடக்க வேண்டும். உலகின் மிக மோசமான வலி மரணவலி. மரண பயம்தான் உலகின் உச்ச பயம். நானும் மரண வலியையும் மரண பயத்தையும் உணர்ந்திருக்கிறேன். என் அக்கா வான்மதி, கரோனாவில் மரணமடைந்தபோது அதன் வலி மூன்று மாதங்களுக்கும் மேலாக என்னை நிலைகுலைய வைத்தது. உடன் பிறந்தவர்களின் மரணம், மற்றவர்களின் மரண வலியைவிடக் கூடுதல் வலியை எனக்கு ஏற்படுத்தியது.

 

ஆண்டாள், தன் துணைவரை இழந்த துயரத்தில் துடிக்கிறார். அந்த வலி அதிகமாகத்தான் இருக்கும். எனக்குக் குடும்பம் இல்லை, மனைவி இல்லை. எனக்கு மனைவி இருந்து, அவர் இறந்திருந்தால், அந்த வலி கூடுதலாகத்தான் இருந்திருக்கும் என்பதை உணர்கிறேன். என் அக்கா மரணமடைந்த நிலையில் எனக்கு வந்த கரோனா, மரண அச்சத்தை எனக்கு உண்டாக்கியது. எப்போதும் வராத மரண அச்சத்தை அப்போது நான் உணர்ந்தேன். அப்போது இது என்ன வாழ்க்கை?  நாம் நடத்திய போராட்டங்கள் எல்லாம் எதைச் சாதித்தன? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன. உலகமே வெறுமையாகவும், இருளாகவும் தெரிந்தது. உலகமே நமக்கு எதிராகச் சுழல்வது போல் தோன்றியது. அந்தப் பயமும் வலியும் வார்த்தைகளுக்குள் வசப்படாதவை. 

 

தனது வாழ்க்கைத் துணையைப் பறிகொடுத்திருக்கும் ஆண்டாள், அழ மாட்டேன் என்று சொல்லிவிட்டு, பாலரமணியும் தானும் முதன்முதலாக டெல்லியில் சந்தித்தது பற்றிச் சொல்லும்போது அழுதார். அதுதான் உண்மைக் காதல். உண்மைக்காதல் கண்ணீராக, பேரன்பாகத்தான் வெளிப்படும். அவர் தன் துயரங்களை எல்லாம் கடந்து, புதிய எழுச்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று உருக்கமாகவும் அழுத்தமாகவும் தெரிவித்தார்.

 

'Love and my fear of death!' - Thirumavalavan at the Balaramani commemoration event

 

நாஞ்சில் சம்பத் தனது பேச்சில், “எல்லோருக்கும் மரணம் வரும். இன்று அவர், என்றால் நாளை நான். அதை ஏற்றுக்கொண்டுதான் வாழ வேண்டும். மரணத்தோடு சமரசம் செய்துகொண்டுதான் நாம் வாழ வேண்டும். புறநானூற்றில், ஒல்லையூர் நாட்டை ஆண்ட பெருஞ்சாத்தன் மறைந்தபோது, அந்த நாட்டில் முல்லைப்பூ பூத்ததைப் பார்த்த ஒரு புலவர், உனக்கு இங்கிதம் இல்லையா? நாடே துயரத்தில் மூழ்கியிருக்கும்போது முல்லைப் பூவே நீ எதற்காகப் பூத்தாய். துயரத்தில் இருக்கும் மக்கள் எப்படி உன்னைச் சூடுவார்கள்? முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று அதை எழுதிய புலவன் கேட்டான். மரணம் அங்கே இலக்கியமானது. மரண வலிகளைக் கடந்தும், மறந்தும் ஆண்டாள் புதிய வேகத்தோடு நடைபோட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

 

இந்த நிகழ்வில் பாலரமணி எழுதிய ‘தமிழ் இலக்கியத்தின் வரலாறு’ என்ற நூலும், ‘என் இனிய பாலா’ என்ற தலைப்பில், தன் கணவர் பற்றி ஆண்டாள் பிரியதர்ஷினி தொகுத்த நினைவு மலரும் வெளியிடப்பட்டன. வி.ஜி.பி. குழுமத் தலைவர் வி.ஜி. சந்தோஷம், மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன், ஆரூர் தமிழ்நாடன், மை.பா. நாராயணன், கவிஞர் இளம்பிறை உள்ளிட்டோர் நினைவுரைகளை வழங்கினர். 

 

ஏற்புரையாற்றிய ஆண்டாள் பிரியதர்ஷினி, “என் உயிரனைய பாலா இங்கேதான் இருக்கிறார். எங்கோ இருந்து அவர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார். மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுத்த பின்னரும் கூட, இன்று ஒன்றாம் தேதி என்பதையும், தன் பிறந்தநாளையும், என் பிறந்தநாளையும் தேதி வாரியாக எழுதிக் காட்டினார். அவர் மரணத்தை உணர்ந்துதான், அவசர அவசரமாக ‘தமிழ் இலக்கியத்தின் வரலா’றை எழுதியிருக்கிறார். அவரின் பிரிவு வலி தாங்க முடியாதது என்றாலும், அனைவரும் தந்திருக்கும் ஆறுதலால், நான் மனம் தேறுகிறேன். இனி என் கண்களில் கண்ணீர் வராது. புத்தெழுச்சியோடு இயங்குவேன்” என்றெல்லாம் நெகிழ்ந்தும் கலங்கியும் கண்ணீர்விட்டும் தன் உணர்வுகளைக் கொட்டினார். உருக்கமான நிகழ்ச்சியில் அத்தனை பேரின் உரையிலும் பாலரமணியின் புன்னகை முகம் தெரிந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.