Skip to main content

’அது பாஜகவின் மோசடி குணத்துக்கு சான்றாக இருக்கிறது’ - திருமாவளவன்

Published on 02/02/2019 | Edited on 02/02/2019
t

 

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து:
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களை ஏமாற்றும் மோசடி பட்ஜெட் ஆகும். பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து கடந்த ஐந்து ஆண்டுகளாக எப்படி மக்களை ஏமாற்றி வந்ததோ அதன் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட்டிலும் பல பொய்களை பாஜக அரசு அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளது. 

 

பட்ஜெட்டின் முக்கியமான மூன்று அறிவிப்புகளாக வருமான வரி வரம்பை உயர்த்துவது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்குதல், சிறு குறு விவசாயிகளுக்கு உதவி அளித்தல் ஆகியவை கூறப்படுகின்றன. அவை மூன்றுமே மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. 

 

வருமான வரி வரம்பை ஆண்டுக்கு 5 லட்சமாக உயர்த்திவிட்டதாக பாஜக காரர்கள் கூறுகிறார்கள். ஆனால் வரி விதிப்பதற்கான ‘சிலாப்’ மாற்றப்படவில்லை. ஏற்கனவே ஆண்டுக்கு 3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை என இருந்தது. இப்போது அது 5 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்குமேல் வருமானம் உள்ளவர்கள் ஏற்கனவே இருந்த  சிலாபின்படிதான் வரி கட்டியாக வேண்டும். எனவே இந்த அறிவிப்பால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே பயன்பெறுவார்கள்.

 

சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் ஏக்கருக்கு 4,000 என்று ஆண்டுக்கு 8000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்தத் திட்டத்தை பார்த்து நகல் செய்துதான் இப்போது அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது . இந்த 6 ஆயிரமும் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. கணக்கிட்டுப் பார்த்தால் 100 நாள் வேலை செய்பவருக்கு கிடைக்கும் தொகை அளவுக்குகூட இது இல்லை.

 

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பென்ஷன் மிகப்பெரிய மோசடியாகும். 29 வயதுக்கு மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொண்டு மாதம் 100 ரூபாய் கட்ட வேண்டுமாம். அவர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் தருவார்களாம். 

 

இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் அமைப்புசாரா தொழிலாளர்களாக உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பதிவு செய்துகொண்டு மாதம் 100 ரூபாய் செலுத்தினால் மத்திய அரசுக்கு மாதம்தோறும் ஆயிரக்கணக்கான  கோடி ரூபாய் வருமானம் வரும். அரசு கொடுக்கப்போகும் பென்ஷனைவிட இது அதிகமாகும்.  10 கோடி பேர் இந்த பென்ஷன் திட்டத்தால் பயன் அடைவார்கள் என்று கூறியுள்ளனர். இந்த பட்ஜெட்டில் இந்தப் பென்ஷன் திட்டத்துக்காக வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.   அதைக்கொண்டு ஒரு ஆண்டுக்கு எத்தனை லட்சம் பேருக்கு பென்ஷன் தரமுடியும் ? 

சுமார் 30 வருட காலம் மாதம் தோறும் 100 ரூபாய் செலுத்தி அதன்பிறகு அவருக்கு பென்ஷன் கிடைக்கும் என்று சொல்வது மிகப்பெரிய மோசடி அல்லாமல் வேறொன்றுமில்லை.

 

தங்களால் நிறைவேற்ற முடியாத பட்ஜெட்டிலும் கூட விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பையும் மோடி அரசு வெளியிடவில்லை. இந்தியா முழுவதும் சுமார் 24 கோடி பேர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களை முற்றிலுமாக இந்த பட்ஜெட்டில் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

மோடி அரசின் ஆயுட்காலம் இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில் இடைக்கால பட்ஜெட் என சொல்லி தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டியதை எல்லாம் அதில் கூறியிருக்கிறார்கள். அப்படி சொல்லும்போது கூட நேர்மையாக எதையும் சொல்லவில்லை. 
அது பாஜகவின் மோசடி குணத்துக்கு சான்றாக இருக்கிறது.

 

அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்கிற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிவிப்பால் நிலைகுலைந்து போய் இருக்கும் மோடி அரசு மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு மோசடி பட்ஜெட்டை அறிவித்துள்ளது. இதை இந்திய மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை. ஐந்தாண்டு காலமாக தங்களை ஏமாற்றிய பாஜக அரசுக்கு தேர்தலில்  தக்க பாடம் புகட்டுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.