Skip to main content

சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு திருமாவளவன் ரூ1.27 கோடி ஒதுக்கீடு!

Published on 28/03/2020 | Edited on 28/03/2020
t

 

கொரோனா வைரஸின் கொடூரத்திலிருந்து நாட்டைக்காப்பாற்றும் முயற்சியில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது.

 

வீட்டிலேயே இருந்தால் அன்றாட செலவுகளுக்கான  பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? ஒரு மாதத்துக்குரிய அனைத்துத் தேவைகளையும் எப்படி ஒரேநேரத்தில் வாங்கி சேமித்து வைக்கமுடியும்?  உறவினர்களோடும் நண்பர்களோடும்  பழகாமல் எப்படி விலகி இருக்கமுடியும்? நம்மையெல்லாம் அது அண்டாது? நாமென்ன வெளிநாட்டுக்கா போய்விட்டு வந்தோம்? நம் ஊரில் வெளிநாட்டுக்குப் போய்விட்டு வந்தவர் யாருமில்லை; எனவே நாம் ஏன் பயப்படவேண்டும்? என்றெல்லாம் எண்ணி அலட்சியமாக இருக்கக்கூடாது. இது எப்படி பரவுகிறது என்பதை ஊடகங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் . எனவே அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். நமக்கும் பரவக்கூடாது; நம்மால் யாருக்கும்  பரவக்கூடாது என்கிற பொறுப்புணர்வுடன் இருப்போம். நோய்த் தொற்றிக்கொண்டதற்கான அறிகுறிகள் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளவேண்டும். 

 

இதற்கு ஏதுவாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், மக்களவை உறுப்பினர்களும்,தேவைகளின் அடிப்படையில் நிதியை ஒதுக்கி வருகின்றனர்.  மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநிலம் தழுவிய அளவில் பொதுவாக நிதி ஒதுக்க முடியும். ஆனால், மக்களவை உறுப்பினர்கள், அவரவர் தொகுதியிலுள்ள மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கான தேவைகளின் அடிப்படையில் மட்டுமே நிதிஒதுக்க இயலும். 

 

அந்தவகையில், சுகாதாரத்துறையின் மாவட்ட அதிகாரிகள் மூலம் பெற்ற வேண்டுகோள்களின்படி, உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் (வென்டிலேட்டர்ஸ்), முகக்கவசம் (மாஸ்க்)  போன்றவை வாங்குவதற்கென சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1,26,61000 / -  (ரூபாய் ஒருகோடியே இருபத்தாறு இலட்சத்து அறுபத்தோராயிரம்) ஒதுக்கப்படுகிறது.


அதிகாரிகளிடமிருந்து அந்த தேவைகளைப் பெறுவதற்கு முன்னரே ரூபாய் பத்து இலட்சம் ஒதுக்கீடு செய்து அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது தேவைகளுக்கான பட்டியல் பெற்றதன் அடிப்படையில் இது முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்கான தேவகைளையும் உரிய அதிகாரிகளிடம் பெற்று அதற்கான நிதியும் விரைவில் இரண்டாவது கட்டமாக ஒதுக்கப்படும்.  பொதுமக்களின் நலன்கருதி இது அறிவிக்கப்படுகிறது. 


கொரோனா வைரஸ் பாதிப்பால்  மருத்துவமனைகளுக்குச் செல்லும் நிலை யாருக்கும் ஏற்படக்கூடாதென்பதே நம் ஒவ்வொருவரின் விருப்பமாகும். எனவே, வீட்டில் பாதுகாப்பாக இருந்தால் மருத்துவமனைக்குச் செல்லும் சூழல் அமையாது என்கிற பொறுப்புணர்வோடு செயல்படுவோம் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று  திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.