thirukovilur

புதுவையை அடுத்ததிருக்கோவிலூரை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 22). தனியார் வங்கி ஊழியர். இவர் திருபுவனையை சேர்ந்த காயத்ரி(வயது 21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே, இரு வீட்டார் சம்மதத்துடன் 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. தம்பதியினர் முதலியார்பேட்டை திரு.வி.க நகரில் குடியிருந்து வருகின்றனர். காதல் திருமணம் செய்திருந்தாலும் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

காயத்ரி இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளார். நேற்று மாலை காயத்ரியின் சகோதரர் அமல்ராஜ் (எ) செல்வராஜ் ராஜேஷ்குமாருக்கு போன் செய்து வீட்டிற்கு வந்து செல்லுமாறு கூறியுள்ளார். ராஜேஷ்குமார் தனது மனைவியிடம் கூறிவிட்டு தனது மைத்துனரை பார்க்க சென்றுள்ளார். இருவரும் திருபுவனைபாளையத்தில் உள்ள சவுக்குத்தோப்பில் நேற்றிரவு மது அருந்த சென்றுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், இன்று காலை சவுக்கு தோப்பு வழியாக வந்த சிலர் அங்கு வாலிபர் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் திருபுவனை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருபுவனை உதவி ஆய்வாளர் அஜித் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது ராஜேஷ்குமார் கழுத்தில் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் மதுபான பாட்டில்களும், கத்தியும் கிடந்துள்ளது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்த ராஜேஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதனையடுத்து ராஜேஷ்குமாருடன் மது அருந்திய அவரது மைத்துனர் அமல்ராஜ் இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அமல்ராஜின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது அதில் அழைப்பு சென்றுக்கொண்டே இருந்தது. ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் குடிபோதையில் குடும்ப தகராறு குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என்றும் அப்போது ஏற்பட்ட வாய்தகராறில் கொலை செய்துவிட்டு அமல்ராஜ் தப்பியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.