
திருச்சி கருமண்டபம் சொசைட்டி காலனியில் டிரஸ்ட் வைத்து நடத்தி வருபவர் சங்கர். நேற்று இரவு டிரஸ்ட் அலுவலகத்தைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை டிரஸ்ட் அலுவலகத்தின் முன் பக்க கதவு உடைக்கும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் சத்தம் போட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வருவதற்குள் மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ததோடு கைரேகை மாதிரிகளையும் சேகரித்துள்ளனர் காவல்துறையினர். அதோடு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த கருமண்டபம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலை 8.30 மணி அளவில் நடந்து சென்ற பெண்ணிடம் ஐந்தரை சவரன் நகை வழிப்பறி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே தொடர்ந்து இந்தப் பகுதியில் நடைபெறும் திருட்டு சம்பவங்களால் பீதியடைந்துள்ள பொதுமக்கள் இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.