Skip to main content

''ஒரு ரூமுக்குள் உன்னை உட்கார வைக்க பார்த்தார்கள் ஆனால்...''-கலைஞர் பேசியது பற்றி மனம் திறந்த மு.க.ஸ்டாலின்!

Published on 07/09/2021 | Edited on 07/09/2021

 

சிங்காரச் சென்னை 2.0 மற்றும் தூய்மை பணிகளுக்கான 36.52 கோடி ரூபாய் மதிப்பில் 1,684 பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் 15 காம்பாக்டர் இயந்திரங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை ரிப்பன் பில்டிங்கில் இன்று நடைபெற்றது. அதேபோல் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

 

அப்பொழுது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''இந்த ரிப்பன் கட்டிடத்திற்குள் நுழையும் போது என்னுடைய நிறைவு 1996 க்கு போய்விட்டது. 1996 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் மேயராக என்னைத்  தேர்ந்தெடுத்து பணியாற்றுவதற்குச் சென்னை மாநகர மக்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு பணியாற்றினேன். மேயர் என்றால் ஒரு பெரிய அங்கி, நூறு பவுன் செயின், செவர்லெட் கார் இதுதான் அவர்களின் பணியாக இருந்தது.  அந்த அங்கியைப் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளுக்குப் போவது, விழாக்களுக்குப் போவது, வெளிமாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்வது, வெளிநாடுகளுக்குப் போவது. இதுதான் மேயரின் வேலையாக இருந்தது. அதை மாற்றி மக்கள் பணியாற்றுவதுதான் மேயருடைய வேலை என்பதை  மேயராக பொறுப்பேற்ற நான் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் என்னுடைய கடமையைச் செய்தேன்.

 

இந்த சாலை வழியாகப் போகும்போதெல்லாம் ரிப்பன் பில்டிங்கை பார்த்துவிட்டுத் தான் போவேன். இந்த ரிப்பன் பில்டிங்கை பார்க்கும் போதெல்லாம் நான் 96ல் மேயராக வெற்றி பெற்றது நினைவுக்கு வரும். அப்பொழுது பொறுப்பேற்பதற்காக இதே ரிப்பன் பில்டிங்கில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். அதற்கு அழைப்பிதழ்கள் தயாராகி, அதைக் கலைஞரிடம் கொண்டுபோய் கொடுத்தோம். கலைஞர் அந்த அழைப்பிதழை உத்து உத்து பார்த்துக் கொண்டிருந்தார். முதல் பக்கத்தில் கலைஞர் எனக்குப் பொன்னாடை  அணிவிப்பதைப் போன்ற புகைப்படமும் கடைசி பக்கத்தில் ரிப்பன் பில்டிங்கின் புகைப்படமும் இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் கலைஞர். 96ல்  வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பொழுது என்னை அமைச்சராக்க வேண்டும் என்று எல்லாரும் கலைஞரிடம் போய் சொன்னார்கள். ஆனால் கலைஞர் என்னை அமைச்சராக்கவில்லை. நானும் அந்த நேரத்தில் அதை விரும்பவில்லை. ஆனால் நம்முடைய தோழர்கள் போய் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் கலைஞர் முடியாது முடியாது எனத் தடுத்துவிட்டார், மறுத்துவிட்டார். ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் நடைபெற்ற மேயர் பொறுப்புக்கான தேர்தலில் நான் போட்டியிட்டு மக்களுடைய வாக்குகளை வாங்கி, மக்கள் வாக்கைப் பெற்ற முதல் மேயராக நான் அன்றைக்குப் பொறுப்பேற்றேன். அந்த பில்டிங்கை பார்த்து அப்போது கலைஞர் சொன்னார், எல்லாரும் சேர்ந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு ரூமுக்குள் உன்னை உட்கார வைக்கப் பார்த்தார்கள். ஆனால் நான் உன்னை எவ்வளவு பெரிய பில்டிங்கில் உட்கார வைத்திருக்கிறேன் என்று கலைஞர் பெருமையாகச் சொன்னார்.

 

இது வரலாற்றுச் சிறப்புமிக்க ரிப்பன் மாளிகை கட்டிடம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சட்டமன்ற கூட்டத்தொடர் செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவடைகிறது. எப்பொழுதுமே சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் பொழுது எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள நான் ஒத்துக்கொள்வதில்லை. ஏனெனில் சட்டமன்ற பணிகளைத் தொடர வேண்டும் என்பதற்காக அமைச்சராக இருந்த போதிலும் சரி இப்போதும் சரி அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அமைச்சர் நேரு  சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் இந்த சமயத்திலேயே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். வரவேண்டியது கொடியசைத்து விட்டுப் போக வேண்டியது என்று சொல்லித் தான் அழைத்து வந்தார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்த பொழுது தான் தெரிகிறது இங்கு ஒரு நிகழ்ச்சியையே  ஏற்பாடு செய்து, மேடை போட்டு என்னைப் பேசவும் வைத்திருக்கிறார். எப்பொழுதுமே நேரு ரொம்ப ஸ்பீடா இருப்பார். அதனால்தான் நான் இருந்த நகராட்சி நிர்வாக பொறுப்பை அவரிடம் கொடுத்து இருக்கிறோம்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.