ADVERTISEMENT

'ஜல்லிக்கட்டில் அரசியல் பண்ணிவிட்டார்கள்; இது அமைச்சரின் சதி' - மாடுபிடி வீரர் அபிசித்தர் குற்றச்சாட்டு

08:05 AM Jan 18, 2024 | kalaimohan

மதுரை பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று (17-01-24) அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டி முடிந்த நிலையில் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 17 காளைகளை அடக்கி அபிசித்தர் இரண்டாவது இடம் பிடித்தார். இறுதி நேரத்தில் முதலிடத்திற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதிச் சுற்றில் கார்த்திக் முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டார். கார்த்திக் கடந்த 2022ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர் என்பதும், அபிசித்தர் 2023 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கிற்கு முதல் பரிசாக காரும், அபிசித்தருக்கு பைக்கும் பரிசளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மேலூர் குணா என்பவரின் கட்டப்பா எனும் காளை முதல் பரிசும், மதுரை காமராஜர்புரம் வெள்ளைக்காளி என்பவரின் காளை சவுந்தர் இரண்டாம் பரிசும் பெற்றது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து இரண்டாம் இடம் பிடித்த அபிசித்தர் என்ற இளைஞர் செய்தியாளர்களிடம் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார். அவர் பேசியதாவது,'' நான் சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த அபிசித்தர். கடந்த 2023 ஆம் ஆண்டு இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 30 மாடுகளை பிடித்து முதல் பரிசு வாங்கினேன். ஆனால் 26 மாடு தான் பிடித்தேன் என்று அறிவித்தார்கள். அப்பொழுதும் அரசியல் பண்ணிவிட்டார்கள். இந்த அரசு அரசியல் தான் பண்றாங்க. இதற்கு முழுக்க முழுக்க அமைச்சர் தான் காரணம். போன ஆண்டு இந்த வருஷம் முதலிடம் அறிவித்துள்ள கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் ரெக்கமண்டில் வந்தார். வேண்டுமென்றால் சக வீரர்கள் எல்லாரையும் கேட்டுவிட்டு இதற்கு ஒரு நியாயம் கொடுக்க வேண்டும்.

இன்றைக்கும் கார்த்திக் ரெக்கமெண்டில் தான் உள்ளே வந்தார். மூணு பேட்ஜில் மாடு பிடித்திருக்கிறார். நான் ரெண்டு பேட்ஜில் தான் மாடு பிடிச்சிருக்கேன். அவர் மட்டும் எப்படி மூன்று பேட்ஜில் மாடு பிடிக்கிறார் என்று கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி போலீசாரால் என்னை அடித்து வெளியே விரட்டி விட்டார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஆகியுள்ளது. நான் 17 மாடு பிடிச்சிருக்கேன். அவரும் 17 மாடு பிடிச்சி இருக்காரு. ஆனால் இதை கமிட்டியாளர்கள் கண்டறியாமல் அவருக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ் கொடுத்துட்டாங்க. இது முழுமையாக அமைச்சரின் சதி. விளையாட்ட்டை விளையாட்டாக வைத்திருக்க வேண்டும். இதில் அரசியலை இழுத்து விடக்கூடாது. நான் நீதிமன்றத்திற்கு போகப் போறேன். வீடியோ பார்த்து யார் முதலிடம் என கண்டறிந்து அதே இடத்தில் மேடை போட்டு அறிவிக்க வேண்டும்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT