Skip to main content

“ஆட்டை மாட்டை அடிக்கிற மாதிரி அடித்து விட்டார்கள்; ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள்'' - ரூபி மனோகரன் பேட்டி

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

 'They beat a goat like a cow; They put the soil in the desire'' - Ruby Manokaran interviewed

 

காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.  ரூபி மனோகரன் முறையாகப் பதிலளிக்கும் வரை அவரைத் தற்காலிகமாக நீக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரூபி மனோகர், ''கே.ஆர்.ராமசாமி அவர்களிடம் எனக்கு கொஞ்சம் நாள் கொடுங்கள் என்று கேட்டேன். கொலை குற்றத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கு போனால் கூட என் தரப்பு வாதத்தை எடுத்து வைக்க எனக்கு நாள் கொடுங்கள் என்று சொன்னால் கூட பத்து நாட்கள் கொடுப்பார்கள். இது எல்லா இடத்திலும் உள்ளதுதான். ஒரு விசாரணைக்கு கூப்பிடும் பொழுது நேரம் காலம் கேட்பது எல்லா இடத்திலும் உள்ளது தான். ஆனால் என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. ஐ ஃபீல் வெரி பேட். பத்து, இருபது ஆண்டுகளாக நான் என் தொழிலை கூட விட்டு விட்டேன். ஓஹோன்னு இருந்த என் தொழில் எல்லாத்தையும் இந்தக் கட்சிக்காக முழுக்க முழுக்க விட்டுட்டேன்.

 

இங்க நிக்கிற கிராமத்து மக்கள் எல்லார்கிட்டயும் கேளுங்க நான் எப்படி வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்னு. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். நான் தங்கபாலு கூட வேலை செய்திருக்கிறேன், அதேபோல் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட வேலை செய்திருக்கிறேன். திருநாவுக்கரசர் கூட வேலை செய்திருக்கிறேன். இப்பொழுது இருக்கும் தலைவர் கூடவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறேன் நான். இப்படிப்பட்ட செய்தி வந்த உடனே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மையைச் சொன்னால் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 

கட்சியைப் பற்றியும் தலைவர்கள் பற்றியும் நான் எந்தக் குறையும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு மிகப்பெரிய வருத்தம் இருக்கிறது. என்னுடைய மக்கள், என்னுடைய பிள்ளைகள் களக்காட்டிலிருந்து வந்துள்ளார்கள். சென்னைக்கு வந்தவர்களை ஆட்டை மாட்டை அடிக்கிற மாதிரி அடித்து விட்டார்கள். அதற்கு யாரிடம் விளக்கம் கேட்க வேண்டுமோ அவர்களிடம் கேட்க வேண்டுமே தவிர நான் என்ன செய்தேன்? வாட் மிஸ்டேக் ஐ டன். எனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் தமிழகத்திலேயே நம்பர் ஒன்னாக 35 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளார்கள் இங்கு நிற்கிறவர்கள். வேறு எந்த தொகுதியிலாவது இந்த அளவிற்கு உறுப்பினர்கள் சேர்த்தார்களா என்று கேளுங்கள்.

 

உயிரோட்டமாக இருக்கிறது கட்சி, நல்லா இருக்கிறது கட்சி, வளர்ந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. பெருமையாக இருக்கிறது, சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. நான் முழுக்க முழுக்க என்னுடைய நேரத்தை இந்த நாங்குநேரி தொகுதி மக்களுக்காக இன்று முதல் முழுசாக ஒப்படைக்கிறேன். எனக்கு எந்த நடவடிக்கை எடுத்தாலும் கட்சி என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படுவேன். என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வருத்தம் இருக்கிறது. இன்னும் இந்தக் கிராமத்தில் கட்சியை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்கள். சரி பரவாயில்லை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.