திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “தமிழ்நாட்டில் நடைபெறும் பாலியல் பிரச்சனைகளைத் தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவான மனு தயார் செய்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம்.
இந்த பிரச்சனை மிகவும் கவலை அளிப்பது போல் உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய தேவையும் உள்ளது. திண்டுக்கல் சுரபி கல்லூரி பாலியல் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே டி.ஜி.பி.யிடம் மனுக் கொடுத்துள்ளோம். இதில் காவல் துறையின் செயல்பாடு குறித்தும் முதல்வரிடம் பேச உள்ளோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நீதிமன்றமும், காவல்துறையும் தவறு செய்தவர்கள் மீது இருக்க வேண்டிய கோபத்தைவிட நியாயத்தை தட்டிக்கேட்பவர்கள் மீது அதிகமாக கோபப்படுகிறார்கள். இவ்வளவு பெரிய கல்லூரியை நடத்தி, பாலியல் பிரச்சனை எழுந்துள்ள நிலையில் அந்த தாளாளர் மீது தான் நியாயமாக கோபம் வர வேண்டும். அந்த தாளாளர் மீது மென்மையான நடவடிக்கை எடுத்துவிட்டு இது பற்றி கேட்டால் பாலபாரதி உள்ளிட்டோர் மீது வழக்குப் போடுவது என்ன நியாயம்” என்று கூறினார்.