கொடுங்கையூரை சேர்ந்த ராஜசேகர் என்பவரை திருட்டு வழக்கில் கைது செய்த போலீசார் கொடுங்கையூர் புறக்காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய நிலையில் அப்போது, திடீரென உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு ராஜசேகரை அழைத்து சென்று சிகிச்சை பெற செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த மருத்துவமனை அறிவுறுத்தலின் பேரில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்த, அவரது குடும்பத்தினர் அவரது உயிரிழப்பிற்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு செய்தியாளர்களைச் சந்தித்து இந்த மரணம் தொடர்பாக விளக்கமளித்தார். அப்பொழுது பேசிய அவர், ''ராஜசேகரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நான்கு இஞ்சூரி மென்சன் செய்துள்ளனர். அந்த நான்கு இஞ்சூரியும் எப்பொழுது ஏற்பட்டது என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்கள். ஏற்கனவே பத்திரிகை நண்பர்களிடம் கூறியிருந்தேன். காலை 8 மணிக்கு அவரை கூட்டி வந்தார்கள். மதியம் பன்னிரண்டு ஒருமணிக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லை. பக்கத்தில் உள்ள ஒரு க்ளீனிக்கில் காட்டினார்கள். அதேபோல் மாலை நான்கு மணிக்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கொண்டு போய் ட்ரீட்மெண்ட் கொடுத்துள்ளனர். மீண்டும் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு சென்ற நிலையில் அவர் சுயநினைவை இழந்துள்ளார்.
மொத்தமாக இந்த 10 மணிநேரம்தான் காவல்துறைக்கும் அவருக்குமான தொடர்பு. ஏற்கனவே அவர் மீது 27 குற்ற வழக்குகள் உள்ளது. அவர் மீது சரித்திர பதிவேடு இருக்கிறது. வழக்கில் சந்தேகத்தின் பேரில்தான் அவரை கூட்டிவந்து விசாரிக்கிறார்கள். இதில் அவர் எதிர்பாராத விதமாக இறந்து விட்டார். இது சம்பந்தமாக 176 1ஏ என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் கொடுத்த வழிமுறைகளின்படி தெளிவாக டாக்டர்ஸை போட்டு வீடியோ பதிவு செய்து பிரேதப் பரிசோதனையை முடித்துள்ளனர்.
இதில் உள்ள நான்கு இஞ்சூரியில் ஒரு காயம் ஒன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு முன்னாடி ஏற்பட்டது. இரண்டு இஞ்சூரி 18ல் இருந்து 24 மணி நேரத்திற்கு முன் ஏற்பட்ட இஞ்சூரி. ஒரு இஞ்சூரி மட்டும் 0 டு 24 என கொடுத்துள்ளார்கள். இந்த காயங்களால் அவர் மரணிக்கவில்லை என்பதையும் தெளிவாக கொடுத்துள்ளனர். காவல்துறை கஸ்டடியில் இருக்கும்பொழுது ஒரு இஞ்சூரியும் ஏற்படவில்லை. மற்றவர்கள் சொல்வதைப்போல இல்லாமல் அவர் மீது எந்தவித பிஸிக்கல் அசால்ட்டும் இல்லாமல்தான் இருந்துள்ளது. அதற்கு சாட்சியாகத்தான் அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையும் உள்ளது. அறிக்கையின் இறுதியில் இந்த டெத்க்கு இந்த இஞ்சூரிகள் காரணம் இல்லை என தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்''என்றார்.
திசு ஆய்வு அறிக்கை வெளியான பிறகே ராஜசேகரின் மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியவரும் எனக் கூறப்படும் நிலையில் பிரேதப் பரிசோதனை செய்த வீடியோவை காண்பித்தால்தான் மகனின் உடலை பெறுவேன் என ராஜசேகரின் தாயார் உஷாராணி தெரிவித்துள்ளார்.