publive-image

இனி நெல் மூடைகளைத் திறந்த வெளியில் வைத்திருக்கும் நிலை வராது என்று உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Advertisment

நெல் கொள்முதல் தொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதலமைச்சரின் முயற்சியால் இந்த ஆண்டு நெல் கொள்முதல் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஒரு மூட்டை நெல் கூட திறந்த வெளியில் வைத்து நனைய விடக்கூடாது என்ற நோக்கத்தில் கொள்முதல் செய்யும் நெல் அனைத்தையும் உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வருகிறோம். அதன்படி கொள்முதல் செய்யப்பட்ட நெல்லில் ஒரு லட்சத்து நாலாயிரம் டன் நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. திறந்த வெளியில் மீதியுள்ள நெல் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரவைக்கும், பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளுக்கும் அனுப்பப்படும்.

முதல்வர் இந்த ஆண்டு 20 திறந்த வெளி கிடங்குகளுக்கு மேற்கூரையும் தரைதளமும் அமைக்க 238 கோடி ரூபாய் ஒதுக்கி அனுமதித்துள்ளார். இவற்றின் கொள்ளளவு 2 லட்சத்து 86 ஆயிரத்து 350 டன்கள். இத்துடன் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் இதர நிறுவனங்களைச் சேர்ந்த 138 கிடங்குகள் உள்ளன. இவற்றின் கொள்ளளவு 7 லட்சத்து 94 ஆயிரத்து 450 டன்கள் ஆகும். எனவே இனி நெல் மணிகளை திறந்து வெளியில் வைத்திருக்கும் நிலை வராது” என்று கூறியுள்ளார்.