Skip to main content

தமிழகத்தில் அமைச்சரவை இருக்கின்றதா? இல்லையா?-திருநாவுக்கரசு

Published on 24/05/2018 | Edited on 25/05/2018

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் வலுத்துவருகின்ற நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு அறிக்கை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில்,  

 

thiru

 

 

சமீப கால தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வற்புறுத்தி அமைதியான போராட்டத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து நூறு நாட்களாக நடத்திவந்த நிலையில். நூறாவது நாளில்  காவல்துறையின் மூலம் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்தை முன்கூட்டியே அறிவித்துவிட்டு மக்கள் நடத்திய நிலையில் போராட்டம் நடத்துபவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி முன்னெச்சரிக்கையோடு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் கூட்டத்தினர் மீது எந்த வரம்பும் பின்பற்றாமல் கண்டபடி துப்பாக்கி சூடு நடத்தியது அரசின் பாசிச போக்கையே காட்டுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆகவேண்டும்.

 

மக்கள் போராட்டங்களை போலீஸ் கெடுபிடியாலோ, கண்ணீர் புகை, பிரம்படி, துப்பாக்கி சூடு, வழக்கு, கைது, ஆகியவற்றால் அரசு தடுத்து நிறுத்த முயற்சிப்பது சர்வாதிகார போக்காகும். ஐம்பதிற்கும் மேற்பட்டோர் அடிபட்டும் துப்பாக்கிச்சூட்டில் குண்டு காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வருகின்றனர். பதிமூன்றுபேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவோ, பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்கவோ, அமைதி குழுக்கள் அமைக்கவோ, மக்களுக்கு ஆறுதல் சொல்லவோ, முதலமைச்சரோ மற்ற அமைச்சர்களோ தூத்துக்குடிக்கு செல்லாமல் சென்னையிலையே முகாமிட்டிருப்பது அரசின் முற்றிலும் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.

 

 

தமிழக அமைச்சரவை இருக்கின்றதா? அரசு செயல்படுகிறதா? என்கிற ஐய்யப்பாடு வருமளவிற்கு எடப்பாடி பழனிசாமி அரசு செயலற்று கிடக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல சென்ற தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்திருப்பது கேலிக்கூத்தாக அமைந்திருக்கிறது. தமிழக அரசின் இத்தகைய மக்கள் விரோத போக்கையும்,ஜனநாயக விரோத போக்கையும், சர்வாதிகார நடவடிக்கைகளையும் கண்டித்து நாளை (25.05.2018) தமிழ்நாடு முழுவதும் முழு பந்த் (கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்தம்) செய்வதென காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளும் வியாபார அமைப்புகளும் முடிவு செய்துள்ளோம். இந்த முழு அடைப்பிற்கு பொது மக்களும் வியாபாரிகளும் மற்றும் அனைத்து தரப்பினரும் முழு ஆதரவு தரவேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.