
பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாமக இரண்டு அணியாக பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
ராமதாஸால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களும் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாமகவிற்கு புதிய பொதுச்செயலாளரை ராமதாஸ் நியமனம் செய்துள்ளார். பாமக மாணவரணி செயலாளராக இருந்த முரளி சங்கர் பாமகவின் மாநில பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டதோடு, வடிவேல் ராவணனை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''ஒரு வாரத்திற்கு முன்பு ராமதாஸ் சென்னைக்கு வந்தார். சென்னையில் நானும் போய் இரண்டு மணி நேரம் பேசினோம். சமூகமான தீர்வுக்கு வரவேண்டும். வேகமாக காலம் தாழ்த்தாமல் முடிவுக்கு வரவேண்டும் என பேசினேன். சரி என ஒத்துக்கொண்டார். ராமதாஸின் சின்னப்பொண்ணு கவிதா வீட்டில்தான் பேசிப் பார்த்துவிட்டு வெளியே வந்த பொழுது செய்தியாளர்கள் இருந்தார்கள். அவர்களிடமும் 'நல்ல தீர்வு விரைவில் வரும்' என்று சொன்னேன்.

சொல்லிட்டு வெளியே வந்த பிறகு நான்கரை மணிக்கு வெளியே வந்த ராமதாஸும் 'ஒரு சமூகமான தீர்வு வரும்; விரைவில் அறிவிப்பேன்' என சொல்லியிருந்தார். இதற்கிடையில் நடைபெற்ற ஒருவார நிகழ்வுகள் கவலை அளிப்பதாக இருக்கிறது. ரொம்ப வருத்தப்படக்கூடிய, வேதனை அளிக்கக் கூடிய செய்திகள் தான் இருக்கிறது. நாங்களும் எவ்வளவோ முயற்சி எடுத்து ஒரு சுமூகமான தீர்வு வேண்டும் என சொல்லி முயற்சி செய்தோம். அது என்னவோ தெரியவில்லை காலம் தாழ்த்தி போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுதும் நாங்கள் நினைப்பது இருவரும் உட்கார்ந்து மனம் விட்டுப் பேச வேண்டும். இதுதான் என்னுடைய விருப்பமும், பாமகவில் உள்ள அனைவருடைய விருப்பமும்'' என்றார்.