ADVERTISEMENT

முதல்வர் நிவாரண நிதி விவரங்களில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை... வெளிப்படைத் தன்மையுடன் நடப்பதாக அரசு தரப்பு விளக்கம்

11:52 PM Jun 26, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கரோனா பேரிடரையொட்டி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெற்ற நன்கொடை விவரங்களில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், அரசு வெளிப்படைத்தன்மையுடன் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி செய்ய, நிவாரண நிதியத்தை உருவாக்க மத்திய - மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம், அதிகாரம் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், கரோனா பரவலை தடுக்கவும், ஊரடங்கு பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க தொழிலதிபர்கள் மற்றும் தனிநபர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை, மக்கள் வழங்கி வருகின்றனர்.

ஆனால், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கான இணையதளத்தில், நன்கொடையாக வந்துள்ள தொகை எவ்வளவு, பயனாளிகள் எண்ணிக்கை எவ்வளவு, என்பன உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், முதல்வர் பொது நிவாரண நிதி இணையதளத்தில் மார்ச் மாதம் முதல், 38 ஆயிரத்து 849 பரிவர்த்தனைகள் மூலம் 20.47 கோடி ரூபாய் பங்களிப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், பத்திரிகைகளில் 306 கோடியே 42 லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், அரசின் நிதித்துறை துணை செயலாளரும், முதல்வரின் பொது நிவாரண நிதி பொருளாளருமான பரிமளாசெல்வி சார்பில், பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது..

அதில், கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி தமிழக முதல்வர் சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, பொதுமக்கள், கார்பரேட் நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள், தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்துள்ளனர். அதற்கென உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தின் வாயிலாக பணம் செலுத்தியவர்கள் விபரம் அதில் இடம்பெறவுள்ளன.

அதே நேரத்தில், அரசின் சேமிப்பு வங்கிக் கணக்கிற்கு வரைவோலை, காசோலை மூலமாகவும், சிலர் இணைய வழி எனச் சொல்லப்படும் (Google pay) கூகுள் பே, (Amazon Pay) அமேசான் பே, (Phonepe) போன் பே (Paytm) பேடிஎம் (Mobikwik) மொபிக்விக் உள்ளிட்ட UPI பணப் பரிவர்த்தனை என, பல்வேறு வகையில் நிதிகள் வருவதால் இவை அனைத்தையும் ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது. எனினும், அனைத்தையும் தொகுத்து, இணையதளத்தில் வெளிப்படைத் தன்மையுடன் முழு விவரங்களை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையதளத்தை பராமரித்து வரும் தேசிய தகவல் மையத்துடன் அரசு இணைந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்.

அதேபோல, 10 லட்ச ரூபாய்க்கு மேலாக நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல், முதல்வர் சார்பில் பத்திரிகை செய்தியாக வெளியிடப்பட்டு, தினசரி நாளிதழ் மற்றும் காட்சி ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன. அது குறித்த விவரங்களை, எப்போது வேண்டுமானாலும் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெறும் தொகையாவும், மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, அதனை பிரத்யேகமாக (PPE KIT) முழு கவச உடைகள், வென்டிலேட்டர், மருத்துவமனைகளுக்கான உபகரணங்கள், தனிமைப்படுத்தும் மையங்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு உணவுப்பொருள் வழங்கல், பொது சுகாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்களில், குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிக்கு வருவதாலேயே, இதுகுறித்த முழுமையான விவரங்களை வெளியிட தாமதமாகிறதே தவிர, இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும், அரசு வெளிப்படைத்தன்மையுடன் விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT